செய்திகள்
விபத்து

திருப்பூரில் இன்று காலை தனியார் கல்லூரி பஸ் மோதி பெண் பலி

Published On 2019-10-30 09:08 GMT   |   Update On 2019-10-30 09:08 GMT
திருப்பூரில் இன்று காலை தனியார் கல்லூரி பஸ் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பலவஞ்சி பாளையம் திருமுருகன் நகரை சேர்ந்தவர் மணி. பனியன் தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (57).

இவர் தனது மருமகன் கருப்பசாமியுடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சிவன் மலையில் நடைபெறும் திருமண வீட்டிற்கு சென்றார்.

மோட்டார் சைக்கிள் திருப்பூரில் உள்ள வித்யா கார்த்திக திருமண மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு தனியார் மகளிர் கல்லூரி பஸ் மாணவிகளை ஏற்றி சென்றது.

திடீரென கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் மோதியது. இதில் கருப்பசாமி மற்றும் பார்வதி ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் பார்வதி பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி கொண்டார். அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். சற்று தள்ளி கீழே விழுந்த கருப்பசாமிக்கு காயம் ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்டதும் தனியார் கல்லூரி பஸ் டிரைவர் தப்பி ஓடி திருப்பூர் தெற்கு போலீசில் சரண் அடைந்தார். காயம் அடைந்த கருப்பசாமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விபத்தில் பெண் பலியானதை தொடர்ந்து தனியார் கல்லூரி பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News