ராஜபாளையம் அருகே வாலிபரை கொலை செய்து தண்ட வாளத்தில் உடல் வீச்சு
ராஜபாளையம்:
சென்னையில் இருந்து இன்று காலை செங்கோட்டை நோக்கி பொதிகை ரெயில் சென்று கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் ரெயில் நிலையம் முன்புள்ள நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு வாலிபர் தண்டவாளத்தில் நடுவில் ரத்த காயங்களுடன் குப்புற கிடந்தார். இதை பார்த்த என்ஜின் டிரைவர் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பினர். ஆனால் அந்த வாலிபரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. இதையடுத்து ரெயில் வாலிபரின்மீது மோதி விட்டு சென்றது. இதில் உடல் துண்டாகி சிதறியது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனர்.
இறந்தவர் 40 வயது மதிக்கத்தக்கவராக உள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. அந்த வாலிபர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தாரா? மர்ம கும்பல் அந்த வாலிபரை கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.