செய்திகள்
விசாரணை

தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலை: மனைவி, உறவினர்களிடம் விசாரணை

Published On 2019-09-17 12:39 GMT   |   Update On 2019-09-17 12:39 GMT
தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலையில் மனைவி மற்றும் உறவினர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது40). இவர் புதுச்சேரியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி பானுபிரியா (32). இவர்களுக்கு சஞ்சய்(8) என்ற மகனும், தர்ஷினி(6) என்ற மகளும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் கடந்த ஒரு மாதமாக தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரிக்கு வேலைக்கு சென்ற வெங்கடேசன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இன்று காலை அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் வெங்கடேசன் தலையில் காயம் இருந்தது. மர்ம நபர்கள், கல்லால் தாக்கி வெங்கடேசனை கொலை செய்தது தெரியவந்தது.  போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசனின் மனைவி பானுபிரியா மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News