செய்திகள்
கனிமொழி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டம்

ரெயில்வே தலைமை அலுவலகத்தில் கனிமொழி தலைமையில் முற்றுகை போராட்டம்

Published On 2019-09-07 09:17 GMT   |   Update On 2019-09-07 09:17 GMT
தமிழை புறக்கணிக்கும் ரெயில்வே வாரியத்தை கண்டித்து தெற்கு ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு கனிமொழி தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னை:

ரெயில்வே துறை ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொது போட்டித் தேர்வை மாநில மொழி இல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நூறு சதவீதம் ‘அப்ஜெக்டிவ்’ கேள்விகள் அடங்கிய இந்த தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டியதில்லை. இதற்காக உரிமை கோரவும் முடியாது என்று ரெயில்வே தேர்வு வாரியம் கூறிவிட்டது.

இதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழை புறக்கணிக்கும் வகையில் ரெயில்வே வாரியம் ஈடுபட்டு வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் சென்ட்ரலில் உள்ள தெற்கு ரெயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது, புறக்கணிக் காதே புறக்கணிக்காதே தமிழை புறக்கணிக்காதே, அனுமதியோம் அனுமதியோம் இந்தி திணிப்பை அனுமதியோம், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். மத்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கிறோம் என்பது போன்ற கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கலாநிதி மற்றும் ரங்கநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News