செய்திகள்
நீரில் மூழ்கி பலி

கும்பகோணம் அருகே அரசலாற்றில் குளித்த மாணவன் சுழலில் சிக்கி பலி

Published On 2019-09-03 10:00 GMT   |   Update On 2019-09-03 10:00 GMT
கும்பகோணம் அருகே அரசலாற்றில் குளித்த மாணவன் சுழலில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் குமாரமங்கலம் முடவன் தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 15). அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் அருண் (15), கணேசன் மகன் சூர்யா (14).

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நாச்சியார்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் தினேஷ்குமார், அருண் ஆகியோர் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதே பள்ளியில் சூர்யா 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று விடுமுறை என்பதால் மதியம் தினேஷ் குமார், அருண், சூர்யா ஆகியோர் குமாரமங்கலத்தில் உள்ள அரசலாற்று குளிக்க சென்றனர்.

அப்போது ஆற்றில் சுழலில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். உடனே காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று தண்ணீரில் தத்தளித்தப்படி கூச்சல் போட்டனர். இதனால் சத்தம் கேட்டு அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி அருணையும், சூர்யாவையும் உயிருடன் மீட்டனர்.

இதில் செடிகளுக்கு இடையில் சிக்கிய தினேஷ் குமாரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News