செய்திகள்
திருமாவளவன்

கனிம வளங்களை சுரண்டவே காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து- திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2019-08-16 18:12 GMT   |   Update On 2019-08-16 18:12 GMT
அதானி , அம்பானிகளுக்காக கனிம வளங்களை சுரண்டவே காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பா.ஜ.க. மீது திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம், குஜராத் போல இந்தியாவுடன் இணைந்தது அல்ல காஷ்மீர். அந்த நாட்டு மக்களின் ஏகோபித்த எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பல நிபந்தனைகளுடன் நமது நாட்டுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இப்போது பா.ஜ.க. பெரிய வரலாற்று பிழையை நிகழ்த்தி விட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை பார்க்கும் போது, அதானி, அம்பானிகளுக்கு அங்கு கடை விரித்து கோடிக்கணக்கான மதிப்புள்ள கனிமவளங்களை சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

ஏற்கனவே நாட்டில் பல லட்சம் மக்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் காஷ்மீர் மாநிலத்தை தன்னிறைவு மாநிலமாக ஆக்குவேன் என்பது வெறும் வாய்ச்சவடால் மட்டுமே. ஜாதி, கட்சி ரீதியான வி‌ஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கைகளில் கட்டப்படும் கயிறு அகற்றப்பட வேண்டும் என்ற நடவடிக்கை வரவேற்கத்தக்கது.


காஷ்மீர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. மோடி, அமித்ஷா ஆகியோரை வர வேற்பது, பாராட்டுவது நடிகர் ரஜினிகாந்தின் சொந்த விருப்பம். அவர் எதிர்த்து பேச வேண்டுமென நாம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அவர் தொடர்ச்சியாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிற வைகோ, காங்கிரசுடனான கருத்து மோதல்கள் நிறைவுக்கு வந்துள்ளது. எந்த சிக்கல்களும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News