திருவாரூரில் காவலரை கத்திரிக்கோலால் குத்திய 4 வாலிபர்கள் கைது
திருவாரூர்:
திருவாரூர் திலகர் திடல் தெரு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் மீது பல்வேறு திருட்டு குற்ற வழக்குகள் உள்ளன. இவரை திருவாரூர் நகர போலீசார் தேடிவந்த நிலையில், திருவாரூர் காட்டாற்று பாலத்தின் அருகே உள்ள பெட்டிக்கடையில் இருப்பதை அறிந்து, நகர காவல்நிலைய காவலர் பிரபாகரன் பிடிப்பதற்காக சென்றார். அங்கு தனது 2 நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சுதாகரனை காவல் நிலையத்துக்கு காவலர் பிரபாகரன் அழைத்தார்.
இதையடுத்து பெட்டிக்கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து காவலர் பிரபாகரனை குத்தி விட்டு, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அருகில் இருந்தவர்கள் பிரபாகரனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் சுதாகரன் (வயது 24), மற்றும் அவரது நண்பர்கள் வெற்றிகுமார் (24), ஈஸ்வரன்(19), சுதாகர்(14) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல நன்னிலத்தில் குற்றவாளிகளை பிடிக்க சென்றபோது காவலர் மணிகண்டன் என்பவர் கல்லால் தாக்கப்பட்டார். தொடர்ச்சியாக இதுபோன்று நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.