செய்திகள்
தஞ்சையில் ஆட்டோ டிரைவருக்கு கத்திகுத்து- 3 சிறுவர்களுக்கு வலைவீச்சு
தஞ்சையில் நேற்று இரவு ஆட்டோ டிரைவரை கத்தியால் கத்திய 3 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளியக்ர ஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது34). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி சவாரி ஏற்றி வருவார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி சவாரிக்காக காத்திருந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் ராஜ்குமார் அருகில் வந்து அவரிடம், அண்ணனிடம் பேச வேண்டும், செல்போன் தாருங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு நீங்கள் யார்? எந்த அண்ணனிடம் பேச வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு அண்ணனை தெரியாதா எனக் கூறி 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாள் மற்றும் கத்தியால் சரமாரியாக அவரை குத்தினர். அவர்களிடம் இருந்து சத்தம் போட்டபடி ராஜ்குமார் தப்பி ஓடுவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் 3 சிறுவர்களும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். சிலர் மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்தி சென்றனர். ஆனால் 3 பேரும் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து பலத்த காயமடைந்த ராஜ்குமாரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பவ நடந்த இடத்தின் அருகே உள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ராஜ்குமாரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் கத்தி மற்றும் வாளால் குத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.