காதல் தகராறில் வாலிபரின் தாய் அடித்து கொலை- 2 பேர் கைது
வேட்டவலம்:
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் செக்குமேட்டு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி லட்சுமி (வயது 43) இவர்களது மகன் ராஜசேகர் (30). பெயிண்டர். இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கொண்ட பிளஸ்-2 மாணவி ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மருதமலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் 2 பேரும் ராஜசேகர் வீட்டிற்கு வந்தனர்.
இதனையறிந்த மாணவியின் பெற்றோர் உறவினர்களுடன் ராஜசேகர் வீட்டிற்கு சென்று மாணவியை மீட்டு அழைத்து சென்றனர். இதனால் மனமுடைந்த ராஜசேகர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள் திருவண்ணா மலை அரசு ஆபத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதை அறிந்த மாணவியின் தந்தை வேலு ஆத்திரமடைந்தார். அவர் உறவினர் சிவாவுடன் ராஜசேகரனின் வீட்டிற்கு சென்று அவரது தாய் லட்சுமியிடம் தட்டி கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வேலு மற்றும் சிவா லட்சுமியை பயங்கரமாக தாக்கினர். இதில் அவர் மயங்கி சரிந்தார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் தப்பி சென்றனர். லட்சுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குபதிவு செய்து வேலு மற்றும் சிவாவை கைது செய்தனர்.