search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் தகராறு"

    • சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.

    இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.

    இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காதல் தகராறில் விபரீதம்
    • போலீசார் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த போஸ்ட்மேன் வட்டம், பார்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஜய் (வயது 25).

    இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காதலர்கள் ரகசியமான இடத்தில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர் 2 பேரையும் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் விஜய்யின் வீட்டுக்குச் சென்று கடபாரையால் கதவுகளை உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டை தீ வைத்து எரித்த பெண்ணின் தந்தை சிவா மற்றும் தாயார் பாரதியை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). விவசாயி. இவரது மகன் பிரசாந்த் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது தாய் மாமன் முருகேசனின் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்த முருகேசனின் மகள் திடீரென காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முருகேசனின் மகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பவானியில் உள்ள குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 2-ந்தேதி இருவரையும் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் இரு தரப்பையும் அழைத்து வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால், சிறுமியை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பிரசாந்த் தனது தாய்மாமன் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மீண்டும் தனது மகளை அழைத்து செல்ல வந்ததாக கூறி முருகேசன் குடும்பத்தினர் பிரசாந்த்துடன் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் குணசேகரன் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மேலும் இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசன் (52), அவரது மனைவி முத்தம்மாள் (45), முருகேசனின் தம்பி சிவக்குமார் (50), அவரது மனைவி தமிழரசி (40) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகேசன் மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.

    அப்போது அங்கே வந்த ஒரு இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் காதலிக்க மறுத்தபோது, அந்த வாலிபர் பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.

    குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர்.
    • அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மொள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது55). விவசாயியான இவருக்கு சாலம்மாள் (48) என்ற மனைவியும், தமிழ்செல்வன் (21) என்ற மகனும், மஞ்சுளா என்ற மகளும் உள்ளனர்.

    தமிழ்செல்வன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமியும், தமிழ்செல்வனும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    காதல் விவகாரம் குறித்து இருவர் வீட்டாருக்கும் தகவல் தெரிந்தால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி மாணவன் தமிழ்செல்வனும், சிறுமியும் பயந்து வீட்டைவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சிறுமி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 5-ந்தேதி தமிழ்செல்வன் வீட்டிற்கு சிறுமியின் உறவினர்கள் சென்றனர். அங்கு அவரது தந்தை கோவிந்தனையும், தாய் சாலம்மாளையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும், ஆத்திரம் தீராத சிறுமியின் உறவினர்கள் கோவிந்தனின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

    இதனால் செய்வதறியாது பயத்தில் இருந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சாலம்மாள் ஆகிய 2 பேரும் கடந்த 7-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தனர்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் ஷெரீப் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த கோவிந்தனிடம் விசாரணை நடத்தினார்.

    இதில் தனது மகன், சிறுமியை காதலித்ததால், அவர்கள் இருவரும் ஊரை விட்டு சென்று விட்டதாகவும், இதற்காக சிறுமியின் உறவினர்களான மாது, பெருமாள், குமார் மற்றும் ஒரு நபர் ஆகிய 4 பேர் எனது வீட்டிற்கு வந்து என்னையும், எனது மனைவி சாலம்மாளை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    அதன்பின்னர் 4 பேரும் சேர்ந்து எனது வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கினர். பயத்தில் தற்கொலை செய்வதற்காக நாங்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்தோம் என்றார்.

    இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் கோவிந்தனையும், அவரது மனைவி சாலம்மாளையும் தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் உறவினர்களான மாது, குமார், பெருமாள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான சிறுமியையும், மாணவன் தமிழ்செல்வனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மொள்ளம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
    • திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர் என்ற மாணவரும் படித்து வருகிறார்.

    மாணவர்கள் 2 பேரும் தங்களுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தனர்.

    இதனால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்துக்கும் உதயசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றுடன் தேர்வு நிறைவடைவதால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயசங்கர் வீட்டில் இருந்த கத்தியை மறைத்து எடுத்து வந்தார்.

    தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட ஆசிரியரும் சக மாணவர்களும் உதயசங்கரை தடுத்து நிறுத்தினர்.

    காயமடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் சிகிச்சைக்காக ராஜாநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜமகேந்திராவரத்துக்கு மாற்றப்பட்டார்.

    மாணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை மேலாண்ட தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 23) மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    அதே மாணவியை தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்ற வாலிபரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ரஞ்சித்குமார், நிர்மல் குமார் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று நிர்மல் குமார் வேலூர் புதிய பஸ் நிலையம் பாலாற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு ரஞ்சித் குமார் வந்தார்.

    அப்போது இருவருக்கும் இடையே மாணவியை காதலிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நிர்மல் குமார் அவரது நண்பர்களான ரெட் என்கிற ராம்குமார், அருண்குமார், பிரவீன் குமார் ஆகியோரை அழைத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரஞ்சித் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஏழுமலை என்பவர் வந்தார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது நிர்மல் குமார் தரப்பினர் கத்தியால் ரஞ்சித் குமார் மற்றும் ஏழுமலையை குத்தினர்.

    இதில் ரஞ்சித் குமாருக்கு மார்பு மற்றும் வயிறு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. ஏழுமலைக்கு தலை மற்றும் கைகளில் கத்தியால் வெட்டினர்.

    படுகாயம் அடைந்த இருவரும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். அவருக்கும் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கண்ணன் கட்டிட வேலை செய்து வந்தார். இவர்கள் நட்பு காதலாக மலர்ந்தது. இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது சினேகாவின் பெற்றோருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சினேகாவின் பெற்றோர் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கண்ணனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தின் பின்னர் சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு செல்போனில் பேசி கேட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து சினேகா பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு கண்ணனை சந்திக்க சென்றார். அவர்கள் மாத்தூர் ரேசன் கடை அருகில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சினேகா தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சினேகா ரத்த வௌ்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இதனால் அச்சமடைந்த கண்ணன் அங்கிருந்த தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார். கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினேகா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இது பற்றி சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சினேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகளை காதலித்த வாலிபரை மாணவியின் தந்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சம்பவம் குறித்து விசாரித்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர்.

    கோவை, :

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த ஜூலை மாதம் மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் வெளியே சென்றார். பள்ளிக்கு செல்லாததால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி பள்ளிக்கு வராதது குறித்து ஆட்டோ டிரைவரான அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாணவி மற்றும் வாலிபர், அவரது பெற்றோரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

    வாலிபர் மீது மாணவியின் தந்தைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இது குறித்து அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

    சம்பவத்தன்று மாணவியின் தந்தை வாலிபரை உன்னிடம் பேச வேண்டும் என ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தியேட்டர் அருகே வருமாறு அழைத்தார். அதன்படி வாலிபர் அங்கு சென்றார். அங்கு மாணவியின் தந்தை தனது நண்பர்கள் 2 பேரும் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசி வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மாணவியின் தந்தை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வாலிபரை குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

    மகளை காதலித்த வாலிபரை மாணவியின் தந்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பேட் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது18). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

    இவரை அதே பகுதியை சேர்ந்த உறவினர் முகேஷ் (23) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை மாணவியிடம் பலமுறை கூறியும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை கீர்த்தனா கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதற்காக மதடிகப்பட்டில் இருந்து பஸ் ஏறி சன்னியாசிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது கீர்த்தனாவை பின் தொடர்ந்து வந்த முகேஷ், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கத்திக்குத்தில் மாணவியின் தலை, கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

    இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த மாணவியின் தம்பி அபினேஷ் தனது நண்பருடன் மொபட்டில் அங்கு வந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது அக்காளை தூக்கி மொபட்டில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

    மாணவியை எடுத்து வந்ததை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கீர்த்தனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அபினேஷ் கதறி அழுதான்.

    மாணவி படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதற்கிடையே கீர்த்தனா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் ஹரி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    மாணவி படுகொலை தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். முகேஷ் மீது ஏற்கனவே அடிதடி, திருவண்டார்கோவில் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் பெயர், போலீசாரால் பராமரிக்கப்பட்டு வரும் ரவுடிகள் சரித்திர பதிவேட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • அதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு ஹரிஹரன் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா (வயது19) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அங்குள்ள தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹரிஹரன் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.

    ஆகவே தன்னை பெண் கேட்டு வருமாறு அபர்ணா கூறியிருக்கிறார். அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். ஆனால் ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.

    தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தொடர்ந்து ஹரிஹரன் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முனீஸ்வரன் என்பவருக்கு அபர்ணாவை நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஹரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று பாண்டியும், அவரது மனைவியும் வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று விட்டனர். அபர்ணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மாலையில் அவரது வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார். அப்போது அபர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட முனீஸ்வரனுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். தன்னுடன் வந்து விடுமாறு அபர்ணாவை ஹரிஹரன் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி குத்தினார். பின்பு அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்நிலையில் அபர்ணாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரன், வீட்டில் யாரோ தகராறு செய்கிறார்கள் என அபர்ணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மளிகை கடையில் இருந்த அபர்ணாவின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்து ஹரிஹரன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த பையை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    அந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபர்ணா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் அபர்ணாவை அவரது காதலன் ஹரிஹரன் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் சென்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ஹரிஹரன் எங்கு சென்றார்? என்று ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் கோவை செல்லக்கூடிய வழித்தடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பதுங்கி இருந்த ஹரிஹரனை தனிப்படை போலீசார் இ்ன்று கைது செய்தனர்.

    இதையடுத்து அவர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். அபர்ணாவை கொலை செய்வதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காதலித்த பெண் தன்னுடன் வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து ஆத்திரமடைந்து அபர்ணாவை கொன்றதாக ஹரிஹரன் தெரிவித்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது சதீஷ்குமார் அங்கு வந்தார். அவர் மாணவியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20). வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார்.

    ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக பழகினர். இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.

    அப்போது சதீஷ்குமார் அங்கு வந்தார். அவர் மாணவியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஆவேசமாக பேசிக் கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மாணவியை மீட்டு முதலுதவி அளித்தனர். மேலும் மாணவர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரையும் மடக்கி பிடித்தனர்.

    இது குறித்த தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மாணவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவர் சதீஷ்குமார் கூறியதாவது:-

    நானும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்தோம். திடீரென அவர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

    வேறு ஒரு மாணவருடன் அடிக்கடி பேசுகிறார். அவர் அந்த மாணவரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி நான் கேட்டபோது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் மாணவியை கத்தியால் குத்தினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் இன்று காலையில் திருவலம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×