search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love issue"

    திருப்பூர் அருகே காதல் பிரச்சினையில் 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில், ஹரி என்ற இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் செந்தில் என்பவர் காதலித்த பெண்ணை சக்திவேல் என்பவரும் காதலித்துள்ளார்.

    இதையடுத்து சக்திவேலிடம் பேச செந்தில், ஹரி இருவரும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சக்திவேலின் தாயார் மட்டும் இருந்த சூழலில் அவரை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து சக்திவேலின் தாயார் அழைத்த உடன் சக்திவேல், அஜித் சகோதரர்கள் இருவரும் பனியன் துணி வெட்டும் லே கட்டிங் கத்தியை கொண்டு செந்தில் ,ஹரி இருவரையும் தாக்கியுள்ளனர்.

    அந்த வழியாகச் சென்ற ராஜ்குமார் என்பவரும் இதனை கண்டு தடுக்க முயன்றுள்ளார். அப்போது செந்தில் ,ஹரி இருவரும் தப்பிய நிலையில் ராஜ்குமார் அவர்களிடத்தில் சிக்கி உள்ளார். அவரை துரத்தித் துரத்தி சகோதரர்கள் இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    முதுகு, வயிறு என பல இடங்களில் கத்திக்குத்து வாங்கிய ராஜ்குமார் தப்பிக்க அருகில் இருந்த பைக் கன்சல்டிங் கடையில் தஞ்சம் புகுந்தார். விடாமல் துரத்திய சகோதரர்கள் கடைக்குள் புகுந்து ராஜ்குமாரை தாக்க முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் அவர்களை தடுத்து உடனடியாக கடை கதவுகளை மூடியதால் ராஜ்குமார் உயிர்தப்பினார். எனினும் விடாமல் கத்தியுடன் சகோதரர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை பேசி அனுப்பி வைத்துவிட்டு காயம்பட்ட இளைஞரை இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கடை உரிமையாளர்கள் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியுடன் பட்டப்பகலில் துரத்தித் துரத்தி இளைஞர்களை தாக்கிய சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக அஜித், கார்த்திக், ஹரி ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலை அருகே காதல் பிரச்சினையில் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அஜித் (வயது 23). அஜித் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து இவர்களின் காதலில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அஜித் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அஜித் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் தக்கலையை அடுத்த மூலச்சல், உம்மச்சாணி விளையை சேர்ந்தவர் நடராஜன் (60). நாகர்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகிய நடராஜன் வேறு வேலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த 25-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை இறந்தார். இது பற்றியும் தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை அவரது நண்பர்கள் 3 பேர் கொலை செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சாகுல்ஹமீது வெளி நாட்டில் இருப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவணியாபுரத்தில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.பின்னர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ்பேகம் உடனடியாக உறவினர்களை அழைத்து கொண்டு திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையோரம் கழுத்து அறுத்து முன்தசீர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த அவரது தாய், மற்றும் உறவினர்கள் மற்றும் திருவடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்தசீரை அவரது கல்லூரி நண்பர்கள் 3 பேர் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

    கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியை இஜாஜ் அகமது (வயது 20), ஜலாலுதீன் (19), முகமது சமீர் (18) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்தசீரை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    போலீசார் விசாரணையில் முன்தசீர், ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் விவகாரத்தில் முன்தசீரை, நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கைதான 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    காதலியை பிரித்ததால் வேதனையடைந்த வாலிபர் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறையைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் (வயது 19). முருகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வினோத் கூலி வேலை பார்த்து தனது அண்ணன், தம்பி, தங்கை ஆகியோரை பராமரித்து வந்துள்ளார்.

    அதே தெருவில் வசிக்கும் முருகேசன் மகள் காளீஸ்வரி (17). பிளஸ்-2 முடித்து உள்ளார். இருவரும் நட்பாக அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். இதனை ஊர் மக்கள் தவறாக புரிந்து கொண்டு அவர்கள் காதலிப்பதாக நினைத்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரையும் சந்திக்க கூடாது என்று சத்தம் போட்டு பிரித்து வைத்தனர்.

    நட்பாக பழகிய தங்களை காதலர்கள் என்று ஊர் மக்கள் கூறியதால் அவர்கள் 2 பேரும் உண்மையாகவே காதலிக்க தொடங்கினர். ஊராருக்கு தெரியாமல் தனிமையில் பேசி பழகி வந்தனர். இந்த வி‌ஷயம் காளீஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்களை மீண்டும் கண்டித்தனர். எனவே வினோத் தனது காதலி காளீஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இருந்தபோதும் காளீஸ்வரிக்கு திருமண வயது வரவில்லை என்பதால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தார்.

    வினோத் கூலி வேலைக்காக கொடைக்கானல் மலை கிராமமான பள்ளங்கி, கோம்பை, பெருங்காடு, மாட்டுப் பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். மலை கிராமங்களில் வீடுகள் வரிசையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். இது போன்ற பகுதியில் காளீஸ்வரியை தங்க வைக்க முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று பெரும் பாறையில் நடந்த கோவில் திருவிழாவில் வினோத் தனது காதலியுடன் சென்றார். ஊர் மக்கள் திருவிழா உற்சாகத்தில் இருந்தபோது காளிஸ்வரியை கடத்திக் கொண்டு வினோத் மலை கிராமத்துக்கு வந்து விட்டார். அங்குள்ள ஒரு குடிசையில் காளீஸ்வரியை தங்க வைத்து வேலைக்கு சென்றார்.

    திருவிழாவுக்கு வந்த காளீஸ்வரி மாயமானதை அறிந்து அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். வினோத் வீட்டில் அவர் இல்லாததால் அவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என்று முடிவு எடுத்தனர்.

    அதன்படி அவர் வேலைக்கு செல்லும் கோம்பை மாட்டுப்பட்டி கிராமத்துக்கு வந்தனர். அங்கிருந்த காளீஸ்வரியை வீட்டுக்கு வருமாறு அடித்து இழுத்துச் சென்றனர். இந்த விபரம் வினோத்துக்கு தெரியவரவே அவர் ஓடி வந்து காளீஸ்வரியை காப்பாற்ற முயன்றார்.

    அவர்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அந்த கும்பல் காளீஸ்வரியை மட்டும் அழைத்துச் சென்றனர்.

    தன் கண் முன்னே காதலியை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்து அவரை காப்பாற்ற முடியவில்லையே என கதறிய வினோத் அரிவாள் மனையால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். ஆனால் இதனை பார்க்காதது போல அந்த கும்பல் வினோத்தை அங்கேயே விட்டு விட்டு செல்ல முயன்றனர்.

    இதனிடையே இந்த விபரம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வரவே அவர்கள் அங்கு திரண்டனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த வினோத்தை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அவரை அனுப்பி வைத்தனர். கொடைக்கானல் போலீசார் காளீஸ்வரியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை கப்பலூரை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகன் மணிபாண்டி (வயது23). அதே ஊரைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும், மணிபாண்டியின் தங்கையும் காதலித்தனர்.

    சம்பவத்தன்று மணிபாண்டியின் செல்போனில் இருந்து தினேசிடம் காதலி பேசி உள்ளார். அதன் பின்னர் அந்த செல்போனுக்கு தினேஷ் சில தகவல்களை பறிமாறி உள்ளார்.

    இது மணிபாண்டிக்கு தெரியவந்ததும் தினேசை கண்டித்தார். இதுதொடர்பாக அவர்களிடையே விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று உச்சப்பட்டி சுடுகாடு அருகே மணிபாண்டி நின்று கொண்டிருந்தபோது தினேஷ், அவரது நண்பர் அப்புக்குட்டி என்ற குரு அங்கு வந்தனர். அவர்கள் மணிபாண்டியிடம் வாக்கு வாதம் செய்து தாக்கவும் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மணிபாண்டி தனது நண்பர்களை அழைத்து வந்து தினேஷ் மற்றும் அப்புக்குட்டியை தாக்கினார். இதுதொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்தனர்.

    மணிபாண்டி புகாரின் பேரில் தினேஷ் மற்றும் அப்புக்குட்டி மீதும், அப்புக்குட்டி புகாரின்பேரில் மணிபாண்டி, பாலு, வெற்றி, நடேசன், ஜெயக்கண்ணன் ஆகியோர் மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர் மகன் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை நண்பரே கல்லால் தாக்கி கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா முரளி தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சிபிராஜ் (வயது 23). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார்.

    தனது நண்பரின் உறவினர் திருமணத்துக்காக சிபிராஜ் ஊருக்கு வந்தார். நேற்று திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக அவர் வீட்டில் கூறிச்சென்றார்.

    இந்த நிலையில் கூடல்புதூர் அருகே உள்ள பொட்டகுளம் வேத வல்லிநகர் முனியாண்டி கோவில் அருகே சிபிராஜ் பிணமாக கிடப்பதாக ஜெயசீலனுக்கு தகவல் கிடைத்தது. கூடல்புதூர் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது தலை நசுங்கிய நிலையில் சிபிராஜ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சிபிராஜுடன் சென்றது யார்? என்பது குறித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சிபிராஜை அவரது நண்பர் பாலாஜி என்பவர்தான் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், சிபி ராஜும், நானும் ஒரே பெண்ணை காதலித்தோம். அந்த பெண் என்னை விரும்பினார். இது சிபி ராஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அந்த பெண்ணை பற்றி பேஸ் புக்கில் தவறான கருத்துக்களை பரப்பினார். இது தெரியவந்ததும், அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதன்படி சிபிராஜிடம் நைசாக பேசி அவரை வேதவல்லி நகருக்கு வரவழைத்து, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

    ×