ஒரத்தநாடு அருகே இளம்பெண்ணை காரில் கடத்தி சென்ற கும்பல்
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு அடுத்த தொண்டராம்பட்டு மேற்கு பகுதியை சேர்ந்தவர் தென்னரசு (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி (25). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தொண்டராம்பட்டு கிழக்கு பகுதியில் உள்ள தாய் வீட்டில் அருள்மொழி தனது குழந்தையுடன் இருந்தார். நேற்று மதியம் அருள்மொழி வீட்டில் இருந்த போது காரில் ஒரு மர்ம கும்பல் வந்தனர். அவர்கள் திடீரென அருள்மொழியை கடத்தினர். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் மர்ம கும்பல் எடுத்து கொண்டு காரில் தப்பி சென்று விட்டனர்.
பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்த அருள்மொழியின் தந்தை அன்பழகன், வீட்டில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, காரில் ஒரு கும்பல் அருள்மொழியை கடத்தி சென்றதை தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண் அருள்மொழியை கடத்தி சென்ற கும்பல் யார்? என்ன காரணத்தால் கடத்தி சென்றார்கள்? முன் விரோதம் காரணமாக இந்த கடத்தல் சம்பவம் நடந்ததா? அல்லது வேறெதும் காரணமா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இளம்பெண் அருள்மொழி சுமார் 15 பவுன் நகையும் அணிந்திருந்தார் என கூறப்படுகிறது. எனவே ரூ.1 லட்சம் மற்றும் நகையுடன் இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
காரில் இளம்பெண்ணை மர்ம கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பாப்பாநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.