பானி புயல் எதிரொலி: திருவொற்றியூர்-எண்ணூரில் கடல் சீற்றம்
திருவொற்றியூர்:
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானிப்புயல் 3-ந்தேதி தேதி (நாளை) ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக வட சென்னை கடலோர பகுதிகளில் காற்று பலமாக வீசுகிறது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகள் சீற்றத்துடன் ஆக்ரோஷமாக கடல் அரிப்பு தடுப்பு சுவரை தாண்டி சாலையில் வந்து விழுந்து வருகின்றன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகு, கட்டுமரம், மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடங்களில் கொண்டு வந்து வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக பாரதியார் நகர் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் காசி விஸ்வ நாதர்கோயில் குப்பம், திருச்சினாங்குப்பம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
புயல் கரையை கடந்த பிறகே கடலில் அமைதி ஏற்படும். அதுவரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் வருத்தம் அடைந்துள்ளனர். #fanistorm #FishermenWarning #IMD