என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea furious"

    • 'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
    • பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

    'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ராமேஸ்வரம் நோக்கி வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சென்னை, மதுரையில் இருந்து வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.

    பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் சேதம் அடைவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    • ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    மண்டபம்:

    வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுபடகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

    அதன்படி இன்று ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம் துறைமுக பகுதியில் திடீர் மீன்பிடி தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை ராமேசுரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

    சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    • கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் இயல்பாக உள்ளது. இந்த நாட்களில் கடல் சுமார் 50அடியில் இருந்து 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரியும். ஆனால் கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் குறைவான பக்தர்களே புனித நீராடுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று 4-வது நாளாக சீற்றம் காணப்பட்டது.

    கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது. இதனால் பக்தர்கள் தயங்கியவாறு புனித நீராடி வருகின்றனர் இதனால் எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் நேரத்தில் கடல் அலைகள் சீற்றத்தால் குறைவான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    • கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 42 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அமாவாசை தினங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குறிப்பாக ஆனி, ஆடி மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் அமாவாசையும் நாளை வருகிறது. இதனால் இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி யது. ராஜாக்கமங்கலம் துறை அருகே புத்தன் துறை பகுதியில் இன்று காலை 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்று வருகிறது.புத்தன் துறை பகுதியில் கடற்கரையொட்டி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரை பகுதிகளில் அச்சத்துடன் நின்றனர். சிலர் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கு மாவட்ட பகுதிகளான வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதியில் உள்ள தடுப்பு மீது வேகமாக மோதியது. சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. வழக்கத்தைவிட அலைகள் கடற்கரை யொட்டியுள்ள பகுதி வரை வந்து சென்றன. கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாளை ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வருகை தருவார்கள். எனவே அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • கடல் சீற்றமாக காணப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 7-ந்தேதி வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்படும். காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாகவும், பங்கு தந்தைகள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலை கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கணபதிபுரம் லெழூர் கடற்கரையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.

    போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். முட்டம், தேங்காய்பட்டினம் உட்பட கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாகவே இருந்தது. ராட்சத அலைகள் எழும்பியது.

     

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது. கடல் சீற்றமாக காணப்பட்ட தையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் வள்ளல்கள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது.
    • தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 47 கி.மீ முதல் 55 கி.மீ. வரை சூறைகாற்று வீசக்கூடும்.

    எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது. மாலை முதல் ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தங்கச்சி மடம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியது.

    மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் அலைகள் பனைமர உயரத்திற்கு ஆக்ரோசமாக எழும்பியது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் சூறைகாற்று, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இன்று தடை விதித்தது. மேலும் அதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ராமேசுவரம் துறை மும் மற்றும் கடற்கரைகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டம் தாழ்வு, சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று பவுர்ணமி என்ற நிலையில் நேற்றே கன்னியாகுமரியில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.

    இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவை சீற்றமாக காணப்பட்டன. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    அதே நேரம் வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இந்த மாற்றங்களை தொடர்ந்து திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் சுற்றுலா போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்தும தொடங்கப்படவில்லை. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலும் கடலில் அதே நிலை நீடித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன.
    • படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக 3 படகுகள் காலை 8 மணி முதல் இடைவிடாது இயக்கப்பட்டு வருகின்றன.

    சுனாமிக்கு பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமியின்போது கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டு வருவதால் படகு போக்குவரத்து தொடங்குவதில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன. இன்று காலையும் கடல் சீற்றமாக இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய மழையும் நீடித்தது. இதனால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    தற்போது பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற காரணங்களால் ஏராளமான வடமாநில சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து உள்ளனர். மேலும் விவேகானந்தர் நினைவிடம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது. அதனை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்திருந்தனர்.

    அவர்கள் இன்று காலை 6 மணியில் இருந்தே படகு குழாமில் காத்திருந்தனர். ஆனால் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதன் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து கூட்டத்தை சீர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    • கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன.

    கடலூர்:

    வங்கக்கடலில் கடந்த பல நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவற்றால் தொடர்ந்து கடல் அலை அதீத சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் உட்புகுந்து உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் கடல் அலை முன்னோக்கி வந்து சென்றதால் மண் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டு வந்தது. தற்போது நாளுக்கு நாள் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் சுமார் 40 அடிக்கு கடல் அலை முன்னோக்கி பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இது ஒரு புறம் இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் தேவனாம்பட்டினம் ஊருக்குள் மீன் விற்பனை செய்யும் இடம் உள்ளது. அதன் அருகாமையில் மீன் வலை பின்னும் கட்டிடமும் செயல்பட்டு வருகின்றது. தற்போது கடல் அலை அதிகளவில் சீறி பாய்ந்து வருவதால் பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு வலை பின்னும் கட்டிடம் கடல் அலையில் அடித்து இழுத்து செல்லும் அவல நிலையில் உள்ளது.

    இதே நிலை தொடர்ந்தால் தேவனாம்பட்டினம் ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தேவனாம்பட்டினம் ஊர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அனைவரும் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

    மேலும் கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் வேகமாக மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைவு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
    • அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதுபோல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகளுக்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கன்னியாகுமரி:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியிலும் பயங்கர கடல் சீற்றம் காணப்பட்டது.

    இன்று காலை கடல் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து மிரட்டின. அவை பாறைகளில் முட்டி மோதி சிதறியதை பார்க்க பயங்கரமாக இருந்தது.

    கடல் சீற்றம் காரணமாக இன்று காலை விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல இன்று இந்த பகுதியில் உள்ள மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் வள்ளங்கள், கட்டுமரங்கள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.



    கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை நேற்றும்3-வதுநாளாக தொடர்ந்து பெய்தது. மழையின் காரணமாக கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சிஅளித்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் மழைமேகத்தை பொருட்படுத்தாமல் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலையில் இருந்தே கடற்கரைக்கு திரண்டு வந்தனர். ஆனால் மழை காரணமாக இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை. இதனால் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைக்கு சூரியன் உதயமாகும் காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இந்த மழையினால் கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் நடுக்கடலில் இருந்தது பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோ‌ஷமாக வந்து கடற்கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.

    சில நேரங்களில் கிளம்பி வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டு விட்டுச் சென்றன. இந்த ராட்சத அலையை கண்டு கடலில் கால் நனைக்க சென்ற சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்தக் கடல் சீற்றத்தினால் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அச்சம் அடைந்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் இந்தகடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக வீசின. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மழையின் காரணமாக கன்னியாகுமரிக்கு ஏற்கனவே வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வெளியே வர முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி குற்றாலம் சீசன் போல் “குளுகுளு” என்று மாறிவிட்டது.
    ×