என் மலர்
நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"
- மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது.
- கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இதனால் ராட்சத அலைகள் கடற்கரையை தாண்டி உள்ள பகுதிகளில் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த கோவிலுக்குள் கடல்நீர் சூழ்ந்தது.
அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளையும் தண்ணீர் சூழ்ந்தது. மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று 2-வது நாளாகவும் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. ராட்சத அலைகள் அவ்வப்போது எழும்பி வருகின்றன. இதனால் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குமரி மேற்கு மாவட்டம் பகுதிகளிலும் கடல் இன்று சீற்றமாக இருந்தது.
- கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 42 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அமாவாசை தினங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குறிப்பாக ஆனி, ஆடி மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் அமாவாசையும் நாளை வருகிறது. இதனால் இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி யது. ராஜாக்கமங்கலம் துறை அருகே புத்தன் துறை பகுதியில் இன்று காலை 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்று வருகிறது.புத்தன் துறை பகுதியில் கடற்கரையொட்டி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரை பகுதிகளில் அச்சத்துடன் நின்றனர். சிலர் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கு மாவட்ட பகுதிகளான வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதியில் உள்ள தடுப்பு மீது வேகமாக மோதியது. சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. வழக்கத்தைவிட அலைகள் கடற்கரை யொட்டியுள்ள பகுதி வரை வந்து சென்றன. கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வருகை தருவார்கள். எனவே அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
- கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்து பணி பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கினர். அதன்படி விசைப்படகுகளில் வலைகளை ஏற்றுதல், கேன்களில் டீசல் நிரப்புதல், படகுகளை இயக்கி என்ஜின் செயல்பாடுகளை சரிபார்த்தல், மீன்களை பதப்படுத்த பெட்டிகளில் ஐஸ் நிரப்புதல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தொண்டி, உச்சிப்புளி, மூக்கையூர் ஆகிய இடங்களில் இருந்து கடலுக்கு செல்வதற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார் நிலையில் இருந்தன. அதே போல் வழக்கமாக குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதற்காக ஆயத்தமாகி இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதிலும் நேற்று மாலை முதல் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக தென்கடல் பகுதியில் 5 அடி உயரத்திற்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீனவளத்துறை தடை விதித்துள்ளது.
ராட்சத அலை எழும்புவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் சீற்றம் காரணமாக பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒருசில படகுகள் பாதுகாப்பு கருதி கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் கடல் சீற்றம் காரமாக தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாளை முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.






