செய்திகள்
நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது - முதலமைச்சர் பழனிசாமி
கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது என தெரிவித்தார். #LokSabhaElections2019 #EdappadiPalanisamy
கோவை:
கோவை கொடீசியா மைதானத்தில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:
130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுள்ளனர். 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்தை தலைகுனிய வைத்தது திமுக. எதிர் கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினின் கருத்தை அவர்களின் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. மிகப்பெரிய ஊழல் செய்த திமுகவினர் ஊழல் தொடர்பாக பிரச்சாரம் செய்கின்றனர்.
நதிநீர் இணைப்பு திட்டம் வந்தால் தண்ணீர் பிரச்சினை இருக்காது. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு வெற்றியை தருவோம். மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும். 40 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். எதிர்காலம் சிறப்பாக இருக்கவும் வளம் காணவும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம்.
மழைநீரை சேமிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #EdappadiPalanisamy