பொள்ளாச்சி விவகாரத்தில் புழுதி வாரி தூற்றுவதா? கமலுக்கு, அ.தி.மு.க. நாளேடு கண்டனம்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்றுகமல்ஹாசன் அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஊழல் கறைபடிந்த கட்சிகள் என்றும், அவற்றுடன் ஒரு போதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று கமல் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த மாதம் தி.மு.க. நாளிதழான முரசொலியில் கமல்ஹாசனை விமர்சித்து கட்டுரைகள் வெளி வந்தன. பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாக தன்னிலை மறந்துவிட்ட கமல்ஹாசன் ஏதேதோ பிதற்றுவதாக அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
பொள்ளாச்சி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியிருந்தார். அதில் தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு. க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கமலை விமர்சித்து கட்டுரை வெளிவந்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
பொள்ளாச்சி விவகாரத்தில் புழுதிவாரி தூற்றுகிறாரே உளறல் நாயகன். அ.தி.மு.க. மீது வன்மம் கொண்டிருக்கும் கமல் போன்றோர் உள்நோக்கம் கற்பிக்க வெறிபிடித்து அலைகின்றனர்.
குற்றம் இழைத்த பாதகர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஆளும் அதிமுக அரசு மீது அவதூறு பரப்புவதற்கு இதுவே தருணம் என்று குற்றச்சாட்டுகளை வீசும் தி.மு.க.வுடன், கமல்ஹாசனும் கைகோர்க்கிறார்.
சான்றோருக்கு இரங்கல் என்று ஜெயலலிதாவின் மரணத்தையே அடிமனதினுள் கொண்டாடிய அரக்கன் தான் இந்த உத்தம வில்லன் என்பதை உலகம் அறியும்.
இவ்வாறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #pollachiissue #kamalhaasan #admk