அதிமுக மெகா கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர்:
கரூரில் இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை உருவாக்குவார்கள்.
அ.தி.மு.க. மெகா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும். இந்த தேர்தலில் 40-ம் நமதே என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து எதிர்க்கட்சிகள் பயந்து போய் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்.
தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. முதலீடுகளுக்காக ரிசர்வ் வங்கியின் அளவீடுகளுக்கு உட்பட்டு தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தை விட பிற மாநிலங்கள் அதிக அளவு கடன் வாங்கியுள்ளன. கடன் வரம்புக்குள்தான் இருக்கிறது. அதனால் எந்தவித பிரச்சினையும் இல்லை, பயமும் இல்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ரூ.3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் ஓட்டுக்கான பணம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'தமிழக அரசு வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. தேர்தல் வருவதால் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிககள் அவ்வாறு கூறுகிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்படுகிறது. அந்த பணம் ரேசன் கார்டு அடிப்படையில் வழங்கப்படாது. ஏற்கனவே தமிழக அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை வைத்துள்ளது. தற்போதும் அது குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தகுதி உடையவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றார்'. #MRVijayabaskar #ADMK