செய்திகள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-03-03 05:31 GMT   |   Update On 2019-03-03 05:31 GMT
திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPS #ADMK

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்காநத்தத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது.

விழாவில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மதுரை என்றாலே ராசியான இடம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் எந்த அரசியல் முடிவு எடுத்தாலும் முதலில் மதுரை மண்ணில்தான் எடுப்பார்கள். அந்த வகையில் அ.தி.மு.க.வின் வெற்றி சரித்திரம் எழுதப்பட்ட இடம் மதுரை.

நானும் மதுரை மாவட்டத்துக்கு சொந்தக்காரன்தான். உங்கள் இளைய சகோதரனாக நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன். ஏழை- எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி. மு.க. 18 லட்சம் உறுப்பினர்களுடன் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற இந்த இயக்கத்தை 1½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மகத்தான இயக்கமாக மாற்றிக்காட்டியவர் அம்மா.

அம்மாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பலர் முயற்சி செய்தனர். அதில் டி.டி.வி.தினகரனும் ஒருவர். ஒரு நாளில் ஆட்சி கவிழந்து விடும், 2 நாளில், 3 நாளில் என்று தினகரன் மக்களை ஏமாற்றினார். ஆனாலும் 2 ஆண்டுகள் ஆகியும் அம்மாவின் அரசை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

அதோடு நிற்காமல் இந்த இயக்கத்தை சொந்தம் கொண்டாட நினைத்து நீதிமன்றம் சென்றனர். அங்கேயும் தினகரனுக்கு மரண அடி கிடைத்தது. உண்மையான அ.தி.மு.க.வான நமக்குதான் இரட்டை இலை சின்னம் என்று நீதிமன்றம் தீர்ப்பு தந்து விட்டது. இது எம்.ஜி.ஆர். தந்த தீர்ப்பு அம்மா தந்த தீர்ப்பு.

அ.தி.மு.க. இயக்கத்துக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மறுமலர்ச்சியும், வளர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. காரணம் தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கம் அ.தி.மு.க. இங்கு தொண்டனாக இருப்பதே நமக்கு பெருமை ஆகும்.

அம்மா ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு சர்க்கரை, அரிசி, கரும்பு வழங்கினார்கள். தற்போது அம்மாவின் அரசு ஏழை- எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க உள்ளது.

இப்படி மக்கள் வாழ்வில் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அ.தி.மு.க. அரசால் மட்டுமே தர முடியும். மக்கள் நம்பக்கம் இருக்கிறார்கள்.

எனவே இனி பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு என்று எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

தமிழகத்தில் அ.தி.மு.க. மக்கள் நலம்பேணும் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தமிழக மக்களின் துரோக கூட்டணி ஆகும். இந்த கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் பேசினார். #OPS #ADMK

Tags:    

Similar News