செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு- வைத்திலிங்கம் எம்பி பேட்டி

Published On 2019-02-22 10:36 GMT   |   Update On 2019-02-22 10:36 GMT
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரசாகமாக உள்ளது என்று வைத்திலிங்கம் எம்பி கூறியுள்ளார். #parliamentelection #vaithilingammp #admk

தஞ்சாவூர்:

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்றத்திற்கு அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளரும், தேர்தல் பிரசார குழு பொறுப்பாளருமான வைகைசெல்வன் நடுவராக பங்கேற்றார். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார். விழாவில் கு.பரசுராமன் எம்.பி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1967-ம் ஆண்டு முரண்பட்ட கொள்கை படைத்த அண்ணாவும், ராஜாஜியும் கூட்டணி சேர்ந்தனர். அதற்கு முன்பு வரை கருத்து வேறுபாடுகளால் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அவர்கள் கூட்டணி சேர்ந்ததால் அப்போது யாரும் கடுமையான வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. கடுமையாக விமர்சனம் செய்த இந்திராகாந்தியை 1980-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நேருவின் மகளே வா. நிலையான ஆட்சி தா? என அழைத்து கூட்டணி சேர்ந்தார் கருணாநிதி.


அப்போது கருணாநிதியை யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த டாக்டர் ராமதாசுவை மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது. நிறைய மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கூட்டணி குறித்து அறிவிப்போம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரசாகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #parliamentelection #vaithilingammp #admk

Tags:    

Similar News