செய்திகள்

பட்டுக்கோட்டையில் சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

Published On 2019-02-12 11:07 GMT   |   Update On 2019-02-12 11:07 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சொத்து தகராறு காரணமாக தம்பியை அண்ணனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 42). இவரது தம்பி ஆரோக்கியசாமி (40). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அருளானந்தம் மனைவி விக்டோரியா மேரி, ஆரோக்கியசாமி மனைவி லீமா ரோஸ்மேரி இடையேயும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக பட்டுக்கோட்டை போலீஸ்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று அருளானந்தம், ஆரோக்கியசாமி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருளானந்தம் கட்டையால் ஆரோக்கியசாமியை அடித்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியசாமி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோக்கியசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுப்பற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அருளானந்தம், அவரது மனைவி விக்டோரியா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News