செய்திகள்
தி.மு.க.வில் ஒருபோதும் சேரமாட்டேன்- தங்க தமிழ்ச்செல்வன்
அ.தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த நான் ஒருபோதும் தி.மு.க.வில் சேரமாட்டேன் என அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan #TTVDhinakaran #ADMK #DMK
ஆண்டிப்பட்டி:
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.டி.டி.வி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்து வரும் தங்க தமிழ்ச்செல்வன் கடந்த சில மாதங்களாக மன வருத்தத்தில் இருப்பதாகவும் இதனால் தான் பெங்களூருவில் சசிகலாவை தினகரன் சந்திக்கும் சமயங்களில் உடன் செல்வதில்லை என்றும் செய்திகள் பரவின.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதுபற்றி அவரிடம் மாலைமலர் நிருபர் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நான் அ.தி.மு.க. குடும்பத்தில் இருந்து வந்தவன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டன். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் விசுவாசி. அ.தி.மு.க. 2 ஆக பிரிந்த போது சசிகலா தலைமையை ஏற்று வந்தவன். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் அரசியலில் பயணித்து வருகிறேன்.
நான் தி.மு.க.வில் சேரப் போவதாக சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் நான் இருப்பதாக கூறினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லையே?
எங்களுக்கு அரசியல் நெருக்கடிகள் பாதிப்புகள் வரும் என தெரிந்துதான் இப்போது இருக்கும் தலைமையை பின் தொடர்ந்து வருகிறோம். எனவே எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #TTVDhinakaran #ADMK #DMK