search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTV Dhinakaran"

    • மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
    • அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்கும் வகையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததோடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் எவருமே இருக்கக் கூடாது என்ற கொள்கைப் பிடிப்போடு அயராது பாடுபட்டவர் இதயதெய்வம் அம்மா அவர்கள்.

    "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதை லட்சியமாக கொண்டு வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு சுயநலமும், துரோக சிந்தனையும் கொண்ட பழனிசாமியின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக, தமிழக மக்களின் மீது எண்ணற்ற சுமைகளை ஏற்றி அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளையோ, மக்கள் நலத்திட்டங்களையோ செயல்படுத்தாத திமுக அரசு, அதற்கு மாறாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

    மின்சார உற்பத்தியை பெருக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஒவ்வொருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் போதும் மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

    ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் திறனற்ற திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க,

    • நூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்ட சொத்துவரி

    • அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு

    • ஆறுமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால்பொருட்களின் விலை உயர்வு

    • விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு

    • நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு பலமடங்கு உயர்வு

    • முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு

    • மறைமுகமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்

    • அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சாலைவரி (Road Tax)

    என எண்ணற்ற வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி ஏழை, எளிய பொதுமக்களின் மீது சுமைகளை ஏற்றுவது தான் திமுக அரசின் திராவிட மாடல் சாதனையா? நனவிலும் பதவி, கனவிலும் பதவி என பதவிப் பித்தர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் திமுகவினருக்கு மக்கள் படும் துன்பங்களும், வேதனைகளும் எப்படி புரியும்? என அனைத்து தரப்பு மக்களும் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

    அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத நியாய விலைக்கடைகள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாத அரசு மருத்துவமனைகள், தமிழக அரசின் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எழுந்திருக்கும் ஊழல் மற்றும், முறைகேடு புகார்கள், நகரங்கள் தொடங்கி கிராமங்களின் கடைத்தெரு வரை வந்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் எதிர்காலத்தை இழக்கும் இளைய சமுதாயம், நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இப்படி, அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்விகளை மறைக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 22.07.2024 (திங்கள் கிழமை) அன்று மாலை காலை 10.00 மணியளவில் தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேரூரை ஆற்றவிருக்கிறார்கள்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், வட்ட/வார்டு/கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

    • அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
    • பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

    அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

    மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

    எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    • இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
    • தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.

    எளிமை, தூய்மை, நேர்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெருமையையும் புகழையும் அவர் பிறந்த இந்நன்னாளில் போற்றிக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
    • பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அ.ம. மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க கூடாது என்பது எனது விருப்பம். என்ன காரணத்திற்காக இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டது என ஆராய்ந்து அதன் பயன் முழுமையடையும் வண்ணம் தொடர்ந்து கள்ளர் பள்ளிகளை அதன் சீரமைப்புத்துறையுடன் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. போதை கலாசாரம் மூலை முடுக்கெல்லாம் பரவி மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக அமைய போகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்கிறவர்களை தடுப்பதில்லை. ஆனால், தி.மு.க.விற்கு எதிராக பேசுகின்ற எதிர் கட்சியை சேர்ந்தவர்களை ஹிட்லர் பாணியில் கைது செய்கின்றனர்.


    இன்று நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை கைது செய்து பின்னர், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை நாம் பார்க்கிறோம். அரசுக்கு எதிராக பேசினால் வழக்கு தொடரலாம், அதே நேரத்தில் யாருமே எங்களை பற்றியோ அரசாங்கத்தைப் பற்றியோ வாய்திறந்தால் நாங்கள் கைது பண்ணுவோம் என மிரட்டுவதற்கு தமிழ்நாட்டில் யாருமே பயப்பட மாட்டார்கள்.

    ஆர்.எஸ்.பாரதி, கண்ணப்பன் உள்ளிட்டோர் பட்டியலின அதிகாரிகளை பார்த்து பேசியதற்கெல்லாம் இந்த அரசாங்கம் வழக்கு போடவேண்டும். அதை விட்டுவிட்டு தி.மு.க.வை பற்றி பேசுவதை தான் வன்கொடுமை சட்ட அளவிற்கு கைது செய்வோம் என பேசுகிறார்கள்.

    பிற கட்சிகளை சேர்ந்தவர்களை கைது செய்வது என்பது சர்வாதிகார போக்காக தான் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மற்ற தலைவர்களை ஒருமையில் பேசுவது, அவமரியாதையுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம். சசிகலாவின் அ.தி.மு.க இணையும் என்ற கருத்து பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

    கடந்த இரு வாரங்களில் மட்டும் 40க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    • அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.
    • உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களில் 7 பேர் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே, புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாராய விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே புதுச்சேரி சாராயத்தை அருந்தி உயிரிழந்ததாக வந்த செய்தியை மூடி மறைக்க முயன்ற திமுக அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.

    எனவே, இனியும் இது போன்று அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் முன்பாக கூலிப்படை கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருப்பதோடு, தமிழகத்தில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

    எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
    • அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நியாயவிலை கடைகளில் கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாத நிலையில், நடப்பு மாதத்திலும் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    நியாய விலைக்கடை களில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, வழக்கம் போல இம்முறையும் ஏதாவது காரணத்தைக் கூறி காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம்.
    • தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி நீர் விவாகரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோரிடம் சோனியா காந்தி மூலம் தமிழக முதலமைச்சர் பேசி தமிழகத்திற்கு உரிய, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் பெற்று தர வேண்டும். ஏனென்றால் கர்நாடகாவில் ஆளுவது காங்கிரஸ் கட்சி தான். தொடர்ந்து கர்நாடகாவிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீர் பெற்று தர வேண்டும். மாறாக டெல்லியில் போய் பேசுவதால் எந்த பயனும் இல்லை.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டோம். பல தொகுதிகளில் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. பணத்தை நம்பாமல் மக்களை நம்பி போட்டியிட்டோம்.

    இதேபோல் வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. 13 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.

    இரட்டை இலை சின்னம் இருந்தும் பல தொகுதிகளில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தலைமை சரியில்லாததே காரணமாகும். தாங்கள் தான் எல்லாம் என்ற நினைப்போடு அ.தி.மு.க.வில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய தொகுதியில் கூட அவர்களால் டெபாசிட் பெற முடியவில்லை.

    எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 10 தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை கண்டுள்ளது. சிலர் தங்களது தவறை உணர்ந்து திருந்தினால் தான் அ.தி.மு.க பலப்படும்.

    உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அ.தி.மு.கவின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சரியான தலைமை இல்லாததால் பலவீனம் அடைந்துள்ளது.

    அ.ம.மு.க தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது. நாங்கள் எங்களது பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

    தமிழகத்தில் கடந்த 2019-ல் பா.ஜ.க.வுக்கு லேசான எதிர்ப்பு இருந்தது. ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பே கிடையாது. பெட்ரோலியத்தை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவர பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி கூறி உள்ளதை பொறுத்திருந்து பார்ப்போம். மக்களுக்கு, நாட்டுக்கு எது நல்லதோ அதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
    • மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைந்து மோடி பிரதமர் ஆவது உறுதி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த கருத்து கணிப்புகள் முடிவுகளும் அதையே சொல்கிறது. 4-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தின் உண்மை நிலவரம் தெரியவரும்.

    தேர்தல் முடிவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் தலைமையில் ஏதேனும் மாற்றம் வருமா? என்பது தொடர்பாக கருத்து சொல்வது நல்லதில்லை. தேர்தல் முடிவுக்கு பின்னர் அதைப்பற்றி பேசலாம்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்காக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    நான் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ஒன்றரை மாதம் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் அதிகமாக கோவிலுக்கு சென்றேன். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோவிலுக்கு செல்வதை பற்றி நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியில் நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதா என்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அனைத்தும் 4-ந்தேதிக்கு பிறகு சரியாகிவிடும் என்றார்.

    • அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • தற்போது கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே பெருகுடா எனும் இடத்தில் தடுப்பணையை கட்டி தமிழ்நாட்டின் பிரதான அணையான அமராவதி அணைக்கு வரும் நீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் வாயிலாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நூற்றுக்கும் அதிகமான கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரள அரசால் கட்டப்படும் இந்த புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்காக கட்டப்படுவதாக கூறப்படும் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    அமராவதி ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பகுதிகளில் தமிழக அரசுக்கு தெரியாமல் கேரள அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில், கூட்டணி தர்மத்திற்காக கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.

    எனவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதியையும், பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சேர்த்து மாநில உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

    • ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
    • எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான கோவை ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்குள் எழுந்த அதிகார சண்டைகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு போராடி கட்சியை தன் வசப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.

    பெருவாரியான தொண்டர்களும் அவரது தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தனித்தனியாக செயல்பட்டாலும் அ.தி.மு.க.வை கைப்பற்ற சந்தர்ப்பங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை.

    இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடனான உறவை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார்.


    சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்ட ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் பா.ஜனதா வுடன் கை கோர்த்தார்கள். ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரனும் பா.ஜனதா ஆதரவுடன் போட்டியிட்டார்கள்.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வுக்குள் ஜெயலலிதா காலத்தைபோல் தலைமைக்கு பயப்படும் நிலையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை. கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த தலைவர்களாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்க மணி போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளுக்கு உடன்படவில்லை.

    அதன்படி கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமியின் முடிவை முழு மனதாக அவர்கள் ஏற்கவில்லை. எனவே தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வில்லை என்ற புகார் எழுந்தது.

    எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான கோவை ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. அங்கு போட்டியிட்ட தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை தோற்கடிப்பதில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வரிந்து கட்டியது.

    ஆனால் பா.ஜனதாவை தோற்கடித்து தி.மு.க. வெற்றி பெறுவதை எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள் விரும்பவில்லை. எனவே தேர்தல் பணியில் தீவிரம் காட்டவில்லை. அண்ணாமலைக்கு ஆதரவாக வேலுமணி ஆதரவாளர்கள் வேலை பார்ப்பதாகவும் கூறப்பட்டது.


    இப்போது தேர்தல் முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வுகள் வேகம் பிடித்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கத்தை, எஸ்.பி.வேலு மணி ரகசியமாக சந்தித்து பேசி இருக்கிறார்.

    ஒரு காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல காரணமாக இருந்தது எஸ்.பி.வேலுமணிதான்.

    டெல்டா மாவட்டங்களில் தனக்கு தெரியாமல் கட்சி நிர்வாகிகளை எஸ்.பி.வேலுமணி மாற்றியதால்தான் வைத்திலிங்கம் கடுப்பானார். அதுபற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தும் பலன் இல்லாததால்தான் வைத்திலிங்கம் வெளியேறினார்.

    இப்படி எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது சந்தித்தது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கூறும்போது, அன்றைய நிலைமை வேறு. இன்றைய நிலைமை வேறு என்றனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மூத்த நிர்வாகிகளை வைத்திலிங்கம் மூலம் ஒன்று திரட்ட ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாகவும் அதன் பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    தேர்தல் முடிவு வந்ததற்கு பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் திட்டம் தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.

    அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் இந்த பனிப்போரை அமைச்சர் ரகுபதி சுட்டிக்காட்டினார். அவர் கூறும்போது, "தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை செங்கோட்டையன் தலைமையில் செல்லப் போகிறதா? வேலுமணி தலைமையில் செல்லப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய பிளவு உருவாக வாய்ப்புகள் அதிகம் என்றார்.

    ஆனால் இந்த பிரச்சினை எதையும் கண்டு கொள்ளாதது போல் எடப்பாடி பழனிசாமி மவுனமாகவே இருக்கிறார்.

    இதுபற்றி அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    நடப்பது எல்லாமும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன் பின்னணியும் அவருக்கு புரியும். அவராக அவசரப்பட்டால் நிலைமை வேறுவிதமாக மாறும். எனவே அவர்களாகவே என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். அவர்கள் வெளியேறினால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறினார்.

    ×