செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பெண் உள்பட 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-09-15 13:10 GMT   |   Update On 2018-09-15 13:10 GMT
சங்கரன்கோவில் அருகே பல்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது38). இவரது மனைவி ராமலெட்சுமி (32). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். சங்கரபாண்டியன் கூலி வேலை செய்து வருகிறார். ராமலெட்சுமிக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கரபாண்டியன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்று விட்டாராம். அப்போது வீட்டில் தனியாக இருந்த ராமலெட்சுமி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சின்னகோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் சமுத்திரம் (45). கூலி தொழிலாளி. இவரின் மனைவி மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்துள்ளார். அவர் குழுவில் பணம் கடன் வாங்கி விட்டு சரியாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பத்தன்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறை சமுத்திரத்தின் தந்தை பொன்னையன் வந்து விலக்கி உள்ளார். அதை சமுத்திரத்தின் மனைவி அவ மரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னையன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். 

இந்த சம்பவத்தினால் மன வேதனை அடைந்த சமுத்திரம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த கரிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News