செய்திகள்
ஓடுபாதையில் சென்ற போது குவைத் விமானத்தில் எந்திர கோளாறு - அவசரமாக நிறுத்தப்பட்டது
சென்னை விமான நிலையத்தில் இருந்து 172 பயணிகளுடன் குவைத் சென்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் ஓடுபாதையிலேயே விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.#ChennaiAirport
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.50 மணிக்கு குவைத் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 166 பயணிகள் உள்பட மொத்தம் 172 பேர் விமானததில் இருந்தனர்.
ஓடு பாதையில் சிறிது தூரம் விமானம் சென்ற போது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக விமானத்தை மேலும் இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தினர். இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இழுவை வண்டிகள் மூலம் விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே இழுத்து வந்து நிறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 172 பேரும் தப்பினர். #ChennaiAirport