அய்யலூர் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை விலை வீழ்ச்சி
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரை, பஞ்சந்தாங்கி, எரியோடு, தங்கம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மானாவாரி மற்றும் காய்கறி செடிகள் பயிரிடுவதை தவிர்த்து முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல கிராமங்களில் இருந்து அய்யலூர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வியாபாரிகளால் வாங்கி செல்லப்படும். மேலும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
கடந்த சில நாட்களாக முருங்கை வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு கிலோ ரூ.10-க்கு வாங்கப்படுகிறது. காலையில் இருந்து தோட்டத்தில் பறித்து அதனை சந்தைக்கு எடுத்து வரும் கூலிகூட கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
விற்காமல் இருப்பு வைத்தாலும் 2 நாளில் வாடி எதற்கும் பயன்படாத நிலையில் குப்பையில் வீசும் நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.