செய்திகள்

திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2018-07-08 16:58 GMT   |   Update On 2018-07-08 16:58 GMT
திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திலீப்குமார், சுரேஷ், சதாசிவம், ஆறுமுகம் ஆகியோர் கடம்பத்தூர் பஜார், கசவநல்லாத்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிள்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், கடம்பத்தூர் வைசாலி நகரைச் சேர்ந்த மணியரசன்(வயது 19), ஆருன்பாஷா(23) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர். 
Tags:    

Similar News