கூடலூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம்
கூடலூர்:
தேனி மாவட்டம், கூடலூர் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் இருபோக நெல் விவசாயமும், மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடலை, தட்டைபயறு, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும் தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை உள்பட பணப்பயிர் வகைகளும் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த சில வருடங்களாக கூடலூர் பகுதியில் தென்னை மரங்களை அழித்துவிட்டு அதிகளவில் ஒட்டு ரக திசு வாழைகளை சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக செவ்வாழை, நாழிபூவன், ரஸ்தாலி, பச்சை பழம் வகைகளை பயிரிட்டுள்ளனர். வாழை மரங்களில் தார்கள் நன்கு விளைந்து உள்ள நிலையில் தற்போது எதிர்பாராமல் பலத்த சூறவாளிகாற்று வீசியதால் கூடலூர் பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களில் வாழை மரங்கள் முறிந்து தார்களுடன் கீழே விழுந்துள்ளது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.