search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடலூர்"

    • கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சாலையில் விழுந்த மூங்கில் தூா்களை அகற்றினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை கொட்டியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்குச் செல்லும் மலைப் பாதையில் நெலாக்கோட்டை கூவச்சோலை பகுதியில் கனமழையால் சாலையின் குறுக்கே மூங்கில் தூா் பெயா்ந்து விழுந்தது. இதனால் அவ்வழியிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    தகவலறிந்த கூடலூா் தீயணைப்புத் துறையினா் மீட்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்துகிடந்த மூங்கில் தூா்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனா்.

    இதனால், அந்த சாலையில் சுமாா் இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. நீலகிரி மாவ ட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கூடலூர் - 76, சேரங்கோடு 63, நடுவட்டம் 60, பந்தலூர் 59, ஓவேலி 48, செருமுள்ளி 48, அப்பர் பவானி 48, பாடந்தொரை 42, தேவாலா 42, கிளன்மார்கன் 31, ஊட்டி - 8.4, பாலகொலா 6, கோடநாடு 4, மசினகுடி 4, கேத்தி 4, கல்லட்டி 2.4, குன்னூர் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
    • கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாண்டியாறு ஆமைக்குளத்தில் ரதி-மன்மதன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அப்பகுதி மக்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் காமன் பண்டிகையையொட்டி ரதி - மன்மதன் திருமணம் நடைபெற்றது. பல்வேறு வேடங்கள் அணிந்த பக்தர்கள் தொடர்ந்து தேர் ஊர்வலம், மொய் விருந்து உபச்சாரம், மன்மதனுக்கு குறி சொல்லுதல் நிகழ்ச்சி, சிவபெருமான் தியானத்தில் அமர்தல், தட்சன் யாகம், முனீஸ்வரர். அகோர வீர புத்திரன் வருகை, மன்மதன், தட்சனை எரித்தல் உள்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது. இதை உணர்த்தும் வகையில் பக்தர்கள் ரதி - மன்மதன் மற்றும் சிவபெருமான் உள்பட பல்வேறு வேடங்களில் விடிய விடிய நடித்து காண்பித்தனர். தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கைப்ைபயை போலீசார் மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
    • சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது

    ஊட்டி

    கூடலூா் வட்டம் நியூ ஹோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆட்டோவில் பயணித்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோவை விட்டு இறங்கும் போது தனது கைப்பையை ஆட்டோவிலேயே விட்டு சென்றதாக தெரிகிறது. சிறிது தூரம் சென்ற பிறகே பையை தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது.உடனடியாக அவர் சம்பவம் குறித்து கூடலூா் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கூடலூா் டி.எஸ்.பி.மகேஷ்குமாா் தலைமையில் சாா்பு ஆய்வாளா் இப்ராஹிம், முத்து முருகன், அசோக் குமாா் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து தடயத்தை சேகரித்தனா். தொடா்ந்து பெரிய சூண்டி பகுதியில் சம்மந்தப்பட்ட ஆட்டோவை செல்வதை அறிந்ததும், அங்கு சென்று ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் விசாரனை நடத்தி பெண் தவறவிட்ட 3 சவரன் தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

    • கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.
    • 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஊட்டி

    தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.

    அப்போது வேனில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனுக்குள் சோதனை நடத்திய போது, சில மூட்டைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.23,880 ஆகும். மேலும் கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது பின்னர் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்காவை கடத்த முயன்ற கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சாணபாட்ஷா (வயது 51), பஷுர் அகமது (40), குண்டல்பெட்டை சேர்ந்த கோவிந்தசாமி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகள் கூடலூரில் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, சுற்றுலா பயணிகள் போர்வையில் கடத்தல் பேர்வழிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.
    • பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தி, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை தாக்கி வருகிறது. தொடர்ந்து வீடுகளையும் சேதப்படுத்தி வந்தன.

    தற்போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி, நூலகம், கிராம அஞ்சலகத்தை 2 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடின.

    இதில் பேரூராட்சி அலுவலக பொருட்கள், பள்ளி வகுப்பறைகள், நூலகத்தில் இருந்த கணினி மற்றும் தளவாடப் பொருட்கள், அஞ்சலகத்தில் இருந்த பதிவேடுகள் நாசமானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை சூறையாடின.

    தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு அறையை சேதப்படுத்தின. பின்னர் அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றன.

    மேலும் அங்குள்ள நூலகத்தை சேதப்படுத்தின. 3-வது முறை இதேபோல் அனைத்து கட்டிடங்களிலும் இருந்த கதவுகளை காட்டு யானைகள் வளைத்து பயன்படுத்த முடியாத வகையில் சேதப்படுத்தி உள்ளது.

    தகவல் அறிந்த ஓவேலி பேரூராட்சி மற்றும் வருவாய், வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி விட்டதால் காட்டு யானைகள் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்து 3-வது முறையாக அட்டகாசத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே, பேரூராட்சி அலுவலக பகுதியில் இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இனிவரும் நாட்களில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    • கூடலூா் தொகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    • பேரணி பழைய பஸ் நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டானா சென்று காந்தித் திடலில் நிறைவடைந்தது.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்ட பகுதியை விரிவாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூா் தொகுதியில் கடந்த ஒருவார காலமாக தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க சாா்பில் அமைப்புச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் பேரணி நடைபெற்றது. ராஜகோபாலபுரத்தில் இருந்து துவங்கிய பேரணியானது பழைய பஸ் நிலையம் வழியாக சுங்கம் ரவுண்டானா சென்று காந்தித் திடலில் நிறைவடைந்தது.

    இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் பேசுகையில், அ.தி.மு.க ஆட்சியில்தான் ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இப்பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து இத்தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.பி.ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசுவதே இல்லை. ஆனால், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜெயசீலன், தொகுதியின் நலனுக்காக பல பிரச்னைகள் சட்டப் பேரவையில் பேசியுள்ளாா் என்றாா்.

    ஆா்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், முன்னாள் அமைச்சா் மில்லா், முன்னாள் எம்.பி. அா்ஜுணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, வர்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீமபாபு, குனானூர் ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

    • கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் கனமழை பெய்தது. இதேபோல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. அண்டை மாநிலங்கள் உட்பட பல இடங்களில் மழை அதிகமாக பெய்ததால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குறிப்பாக கூடலூரில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை வெறிச்சோடியது.

    இந்த நிலையில் மழை குறைந்து பரவலாக வெயில் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. தொடர்ந்து மாயாற்றில் வெள்ளம் குறைந்து விட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் யானைகளுக்கு வன ஊழியர்கள் உணவு தயார் செய்வதை பார்வையிட்டனர். இதனால் வளர்ப்பு யானைகள் முகாம் களை கட்டி உள்ளது. தொடர்ந்து தனியார் வாகன சவாரி மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் வாகன சவாரி, வளர்ப்பு யானை முகாமுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர் என்றனர்.

    • ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர்

     கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மகாவிஷ்ணு, பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகா விஷ்ணு கோவில்களில் காலை முதல் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல இடங்களில் சிறுவர் சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். ராதை வேடம் ஊர்வலம் நர்த்தகி பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய சாலை வழியாக சக்தி முனிஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தி கோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்களும் சென்றனர்.


    தொடர்ந்து நம்பாலகோட்டை கிரிவலம் குழு தலைவர் நடராஜ், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி ரேணுகா உள்பட பலர் பேசினர். விழாவில் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் ஆனந்தன், குமார், கிருஷ்ணதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து குனில் பாலத்தில் இருந்து ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். கூடலூர் அருகே பாடந்தொரையிலும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதேபோல் ஊட்டி, பந்தலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன.

    • வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள கோடமூளா என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் பெட்டகுரும்பா இனத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கி இருக்கும் வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு அரசு புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து இவர்களுக்கு 2018-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 46 வீடுகள் கட்டப்படுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வீடு கட்டும் பணி

    தொடங்கியது.வீடு கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளை கடந்தும், இதுவரை 10 வீடுகள் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 வீடுகள் முழுமையடையாமலும், மேற்கூரை அமைக்கப்படாமலும் பாதியிலேயே நிற்கிறது.

    இதனால் புதிய வீடுகளில் குடியேறலாம் என்று நினைத்த பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் ஒழுகும் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் தார்பாய்கள், பிளாஸ்டிக் தாள்களை வைத்து மறைத்து வீடுகளில் வசித்து வருகிறோம். இது தொடர்பாக கூடலூர் நகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி பாதியில் நிற்கும் வீடுகளை கட்டி ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • அனுமதியின்றி சிலர் மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் நின்றிருந்த ராட்சத மரத்தை சிலர் உரிய அனுமதி பெறாமல் வெட்டி அகற்றியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் நேரில் சென்று பார்ைவயிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று எருமாடு அருகே வெட்டுவாடியில் ராட்சத மரத்தை உரிய அனுமதியின்றி சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    • புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி, 

    கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார்.

    அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மாரியின் மற்றொரு பசு மாட்டை நேற்று மதியம் புலி தாக்கி கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது புலி தாக்கி 2 பசு மாடுகள் பலியானது தொடர்பாக உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அப்பகுதியில் நடமாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புலி நடமாட்ட பீதியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

    • விநாயகன் என்று அழைக்கப்படும் காட்டு யானைதான் தினமும் ஊருக்குள் வருகிறது.
    • கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்:

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், மட்டம், ஒற்ற வயல், செட்டியங்காடி உள்பட பல்வேறு கிராமங்களுக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வருகிறது. மேலும் அங்கு பயிரிட்டு பராமரித்து வரும் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் எதிரே வரும் பொதுமக்களை காட்டு யானை விரட்டும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அலறியடித்து ஓட்டம் இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு மச்சிகொல்லி கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து முக்கிய சாலையில் நடந்து சென்றது.

    இதை கண்ட பொதுமக்கள், அலறி அடித்தவாறு தங்களது வீடுகளுக்குள் சென்று பதுங்கினர். இதேபோல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை மையத்துக்கு கொண்டு செல்லும் ஊழியர்கள் காட்டு யானையை கண்டு ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் காட்டு யானை தனியார் தோட்டத்துக்குள் சென்றது. அதன் பின்னரே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, விநாயகன் என்று அழைக்கப்படும் காட்டு யானைதான் தினமும் ஊருக்குள் வருகிறது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×