தேனி அருகே முன் விரோதத்தில் வாலிபரை வெட்டிய கும்பல்
தேனி:
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர் செல்லபாண்டி. இவரது மகன் செல்வம் (வயது 25). இவருக்கும் வீரபாண்டி ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த கணேசன் (24) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசனை அரிவாளால் செல்வம் வெட்டினார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் முல்லையாற்று பகுதியில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கணேசன், செல்லக்காமு, குட்டக்காமு ஆகியோர் அவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த செல்வம் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.