செய்திகள்
உசிலம்பட்டி அருகே பெண் குத்திக்கொலை: வீட்டு முன்பு உடல் கிடந்ததால் பரபரப்பு
வீட்டு முன்பு இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கருமாத்தூரை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி மலர் (வயது 27).
கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன், மகளுடன் மலர் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பு மர்மமான முறையில் மலர் இறந்து கிடந்தார்.
அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. உடலில் கத்திக்குத்து காயமும் காணப்பட்டது. எனவே அவரை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.
செக்கானூரணி போலீசார் சம்பவ இடம் சென்று மலர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உசிலம் பட்டி துணை சூப்பிரண்டு கல்யாணகுமார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.