செய்திகள்

விழுப்புரம் அருகே லாரி அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை கொள்ளை

Published On 2018-04-24 11:52 GMT   |   Update On 2018-04-24 11:52 GMT
விழுப்புரம் அருகே லாரி அதிபர் வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார்(வயது 55). லாரி அதிபர். இவரது மனைவி மல்லிகா(38). இவர் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு காற்றுக்காக வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் மர்மமனிதர்கள் சிலர் அய்யனார் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பட்டுசேலைகளை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

இன்று அதிகாலை மல்லிகா எழுந்து வீட்டுக்குள் சென்றார். அப்போது பீரோ உடைக்கப்பட்டும், அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவை பார்த்தபோது அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு வெளியே சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News