செய்திகள்

தஞ்சை அருகே விவசாயியை வழிமறித்து வெட்டி படுகொலை - கும்பல் வெறிச்செயல்

Published On 2018-04-19 11:57 GMT   |   Update On 2018-04-19 11:57 GMT
விவசாயியை மர்ம கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாத்தூர் ஒத்தவீடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மனோகரன் (வயது 45). விவசாயி. இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் அய்யம்பேட்டை கடைவீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது குடமுருட்டி ஆறு தென்கரை அருகே சென்ற போது திடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல், மனோகரனை வழிமறித்தது. பின்னர் அவர்கள் ஆவேசமாக மனோகரனை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடினர்.

ஆனால் கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் தலை, கை,கால்களில் பலத்த வெட்டு காயத்துடன் மனோகரன் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.30 மணிக்கு மனோகரன் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பாபநாசம் போலீஸ் டி.எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட மனோகரனுக்கு ஷோபனா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த கொலை குறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ‌ஷர்மிளா, சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி மனோகரனை கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News