செய்திகள்

ராமர் ரதயாத்திரைக்கு அரசு அனுமதி அளிப்பதா?- நடிகை குஷ்பு கண்டனம்

Published On 2018-03-20 06:29 GMT   |   Update On 2018-03-20 06:29 GMT
தமிழ்நாட்டில் ராமர் ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ராமர் ரத யாத்திரை குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இந்த ரத யாத்திரை இதுவரை நடந்தது இல்லை. எல்லா மதத்தினரும் அண்ணன், தம்பிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு தெருவில் இஸ்லாமியர் இருப்பார்கள். மற்றொரு தெருவில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இருப்பார்கள். எல்லா பண்டிகைகளையும் எல்லோரும் கொண்டாடி அமைதியாக இருந்து வருகிறார்கள்.

ஒரே நாடு, ஒரே மதம் என்ற கொள்கையோடு பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. எல்லா மாநிலங்களிலும் அவர்களால் காலூன்ற முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்களால் நுழைய முடியவில்லை. எல்லா மாநிலங்களிலும் காலூன்ற வேண்டும் என்பதால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா ஆகியவற்றின் திட்டமிட்ட செயல்தான் இந்த ரதயாத்திரை.

அரசிடம் அனுமதி பெறாமல் ரத யாத்திரை நடத்த முடியாது. அ.தி.மு.க. அரசு மத சம்பந்தப்பட்ட இந்த ரத யாத்திரைக்கு எப்படி அனுமதி கொடுத்தது? மத சம்பந்தப்பட்ட யாத்திரைகள் நடத்தும்போது பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து அனுமதி கொடுத்து இருந்தால் அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

பா.ஜனதா குட்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

ரதயாத்திரை மூலம் தென் மாவட்டடங்களில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

மக்களிடையே அமைதியை ஏற்படுத்த அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யாத்திரைக்கு அனுமதி கொடுத்து இருந்தால் ஏன் கொடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அனுமதி கொடுத்து இருக்காவிட்டால் உடனே தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News