செய்திகள்

வாலாஜாவில் பைக் திருடியதாக வாலிபர் அடித்து கொலை

Published On 2018-03-12 08:08 GMT   |   Update On 2018-03-12 08:08 GMT
வாலாஜாவில் பைக் திருடியதாக வாலிபரை அடித்துக் கொன்றது தொடர்பாக 3 பேர் போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:

வேலூர் மாவட்டம் வாலாஜா பாக்குபேட்டை கடத்த ரங்கையன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன்கள் கலைச் செல்வன், கார்த்தி. சமீபத்தில் கலைச்செல்வனின் பைக் திருடு போயுள்ளது.

இதுதொடர்பாக, கடத்த ரங்கையன் தெரு அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ் மகன் சக்திவேல் (வயது 18) என்ற வாலிபர் மீது பைக்கை பறி கொடுத்த கலைச்செல்வன் சந்தேகித்தார்.

கலைச் செல்வன் தனது தம்பி கார்த்தி மற்றும் நண்பர் சதீஷ்குமாரை அழைத்துக் கொண்டு கடந்த 9-ந் தேதி சக்திவேல் வீட்டிற்கு சென்றார். சக்திவேலை வீடு புகுந்து கடத்திய அவர்கள் ஆட்டோவில் தங்களுடைய பகுதிக்கு தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, திருடிய பைக்கை திருப்பி கொடுத்து விடு என்றுக்கூறி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

மேலும், சக்திவேலின் மர்ம உறுப்பிலும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, ஆட்டோவில் தூக்கி சென்று வீட்டு முன்பு வீசி விட்டு தப்பினர். பெற்றோர் சக்திவேலை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, வாலாஜா போலீசில் சக்திவேலின் தந்தை புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்கு பதிந்து, கலைச்செல்வன் மற்றும் அவரது தம்பி கார்த்தி, நண்பர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News