search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burglar"

    தஞ்சை அருகே 6 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை:

    தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 45), இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்படி நேற்று இரவு அங்கு சென்ற போலீசார் கோபிநாத்தை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் நடுக்காவேரியைச் சேர்ந்த கலியராஜ் மகன் வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வேல்முருகன் வீட்டை சோதனை செய்தபோது 176 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மேலும் போலீசார் வேல்முருகனிடம் விசாரணை நடத்தியதில் கோபிநாத் வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடி மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 6 இரு சக்கர வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் நடுக்காவேரி போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    மதுரையில் ஆட்டோவில் பேட்டரிகள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

    இதன்படி தெற்கு துணை கமி‌ஷனர் தங்க துரை உத்தரவின் பேரில் திலகர் திடல் உதவி கமி‌ஷனர் பழனிகுமார் மேற்பார்வையில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.

    ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (30), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மர்ம நபர் ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகளை திருடுவது தெரியவந்தது.

    இதனை தற்செயலாக கவனித்த ஆனந்த், ‘திருடன், திருடன்’ என்று கூச்சல் போட்டார். அந்த பகுதிக்கு தனிப்படை போலீஸ் தற்செயலாக ரோந்து சென்றது.

    ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டதும் தனிப்படை போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அவர் ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி தெருவை சேர்ந்த செல்வம் (47) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தங்களை திருடிய 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வன சரகத்துக்குட்பட்ட கரியன் படுகை வனப்பகுதியில் கடந்த 23-ந் தேதி ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை வன ஊழியர்கள் பார்த்தனர்.

    அந்த யானையின் இரண்டு தந்தங்களும் திருட்டு போயிருந்தது. யாரோ யானையின் தந்தங்களை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் 2 நாட்களுக்கு பின்னர் தந்தங்களை திருடிய மர்மநபர்கள் யானை இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து விட்டு சென்றனர். இதனை வனத்துறையினர் மீட்டனர்.

    தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானையின் தந்தங்களை தாணி கண்டியை சேர்ந்த மருதுபாண்டி (வயது 27), ராமன்(50), சின்னான் (50) ஆகியோர் விற்பனை செய்வதற்காக திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீரை மற்றும் மூங்கில் குருத்து எடுக்க காட்டிற்குள் சென்ற போது இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்ததாகவும், சிக்கி விடுவோம் என்ற பயத்தில் மீண்டும் யானையின் தந்தங்களை வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தனர்.

    பின்னர் வனத்துறையினர் 3 பேரையும் 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் பவானிசாகர் சப்-ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    திருமருகல் பகுதியில் வீடு-கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆதினக்குடி, போலகம், மானாம்பேட்டை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் அடிக்கடி திருட்டு போனது.

    திருமருகல் பகுதி கடைகளிலும் திருட்டு போனது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விஜய குமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி நாகூர் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் தலைமையில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் திருமருகல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

    அப்போது சீயாத்தமங்கை கைகாட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பிச் சென்றார். இதனால் போலீசார் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருமருகல் அருகிலுள்ள சேகல் வடக்கு தெருவைச் சேர்ந்த சட்டநாதன் (வயது 35) என்றும் இவர் திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது மேலும் விசாரணையில் அவர் திருமருகல் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சட்ட நாதனை கைது செய்து அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

    நெற்குன்றம் பகுதியில் வாகனங்களை திருடி விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    போரூர்:

    கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வேன் டெம்போக்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவம் நடந்து வந்தது.

    இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் துலூக்கார்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது, வளசரவாக்கம் கடும்பாடியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த யோகநாதன்.

    அவர்கள் இருவரையும் கடந்த மாதம் கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்,. அவர்கள் வாகனங்களை திருடி வெளியூர்களில் குறைந்த விலைக்கு விற்றது தெரிந்தது. அவர்களிடமிருந்து 2 சொகுசு டெம்போ டிராவலர் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கைதான அப்துல் ஹமீது, யோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோயம்பேடு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    இதனை ஏற்று கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தர விட்டார்.

    திருப்பதி பஸ் நிலையங்களில் பயணிகள் போல் நடித்து நகை, பணம் திருடிய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி பஸ் நிலையங்கள் மற்றும் பஸ்களில் பயணிகளிடம் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக திருப்பதி குற்றப்பிரிவு போலீசாருக்குப் புகார்கள் வந்தன. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் திருப்பதியில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மாதவம் தங்கும் விடுதி அருகில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த இரு இளம்பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும், கர்னூல் மாவட்டம் ஆத்மகூரு மண்டலம் சித்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரமணம்மா என்கிற சங்கீதா (வயது 22), அனிதா (19) எனத் தெரிய வந்தது. இளம்பெண்களான இருவரும், திருப்பதியில் உள்ள பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள்போல் நடித்து, சக பயணிகளிடம் நகை, பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான இரு இளம்பெண்கள் மீதும் திருப்பதி போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆதம்பாக்கத்தில் 600 கிலோ செம்புகம்பி திருடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பூந்தமல்லி:

    ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் அப்துல். இவர் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் பழைய வயர்களில் இருந்து செம்பு கம்பி, அலுமினியம் ஆகியவற்றை பிரித்து எடுக்கும் கம்பெனி வைத்திருக்கிறார்.

    இங்கு 5 பேர் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கம்பெனியில் இருந்த செம்புகம்பி திருட்டு போனது. இதுகுறித்து அப்துல் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, கம்பெனியில் உள்ள சி.சி. டி.வி. கேமரா மூலம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் செம்புகம்பி திருடியவர்கள் பற்றிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் கேளம்பாக்கத்தில் பழைய இரும்பு கடை வைத்துள்ள ஜான்ராஜ் (27), அசாம் மாநிலத்தை சேர்ந்த பகதூர் சட்டர்ஜி (23), அனில் (22), ஆப்தர் அலி (23), பிஜில் மோரன் (22), தன்போரா (21) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பிடிபட்டவர்களிடம் இருந்து 600 கிலோ செம்புகம்பி பறிமுதல் செய்யப்பட்டது. கேளம்பாக்கம் ஜான்ராஜ், அசாம் வாலிபர்களை வாடகை வீட்டில் தங்க வைத்து செம்புகம்பி திருட வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதவிர வட மாநில வாலிபர்கள் எங்கெங்கு திருடினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை மற்றும் பணத்தை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெசலிங்கப்பா. இவரது மனைவி திலகா.

    இந்த நிலையில் நேற்று திலகா ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். அங்கு கொலுசு வாங்கி விட்டு ஒரத்தநாடு- மன்னார்குடி டவுன் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர் சாவடி பஸ் நிறுத்தத்தில் திலகா பஸ்சை விட்டு இறங்கிய போது தான் கொலுசு மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் வைத்திருந்த கைபையை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கூச்சல் போட்டதால் பஸ்சில் இருந்தவர்கள் பஸ்சை நிறுத்த கூறினர். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள், திலகாவிடம் நகை- பணத்தை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து அந்த 3 பெண்களையும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் 3 பெண்களும் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான 3 பெண்களும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும் பிடிபட்ட 3 பெண்களும் தங்களது பெயர்களை மாற்றி மாற்றி கூறி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ×