செய்திகள்
நெல்லை ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் திட்டமில்லை - மத்திய அரசு
நெல்லை ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் திட்டம் தற்போது இல்லை என ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை:
நெல்லை ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும், அந்த அறிக்கையின் அடிப்படையில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் மற்றும் அங்கு மீண்டும் விரிவான ஆராய்ச்சி நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வின் முன்னர் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொல்லியல் துறையில் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் சத்தியமூர்த்திக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை கார்பன் சோதனைக்கு அனுப்பினால் தான் அதன் உண்மையான காலம் தெரியவரும் என கூறிய நீதிபதிகள், இதில், மத்திய மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை என வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மீண்டும் ஆகழ்வாய்வு செய்ய முடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொல்லியல் துறை சார்பில் தாக்கல் செய்த பதிலில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்ய தற்போதைக்கு திட்டமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முன்வராவிட்டால் மாநில அரசு அகழ்வாய்வு நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மத்திய தொல்லியல் துறை இது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் தொல்லியல் துறை இயக்குநரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.#TamilNews