செய்திகள்

புதுவையில் பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2018-02-13 11:22 GMT   |   Update On 2018-02-13 11:22 GMT
புதுவையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வில்லியனூர்:

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள உத்திரவாகினிபேட் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 23). மாட்டு வண்டி தொழிலாளி.

நேற்று இரவு இவர் தனது வீட்டு வாசலில் நண்பர்கள் 2 பேருடன் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 2.30 மணியளவில் ஒரு மர்ம கும்பல் அங்கு வந்தது. அவர்கள் ஏழுமலையை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதனை பார்த்ததும் ஏழுமலையின் நண்பர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி விட்டனர். ஏழுமலை உயிர் பிழைக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த கும்பல் தலையிலும், முகத்திலும் வெறித்தனமாக அரிவாளால் வெட்டியது. இதில் ஏழுமலையின் முகமும், தலையும் சிதைந்து போனது. ஏழுமலை உயிர் விட்ட பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் மோகன்தாஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழுமலைக்கு தொடர்பு இருந்ததால் அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக ஏழுமலையை தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

மேலும் ஏழுமலையை பெரியபேட் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வெட்டி கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ரவி மற்றும் அவரது கூட் டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே ஏழு மலையை வெட்டி கொன்ற கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி ஏழுமலையின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வில்லியனூர் போலீஸ் நிலையத்தை இன்று காலை முற்றுகையிட்டனர்.

மேலும் போலீஸ் நிலையம் முன்பு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவத்தால் உத்திரவாகினிபேட் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News