செய்திகள்
வால்பாறையில் ஆற்றில் மூழ்கி 1 வயது ஆண் குழந்தை பலி
ஆற்றில் மூழ்கி 1 வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை:
வால்பாறை நடுமலை தெற்குமலை பகுதியை சேர்ந்தவர் ராம்ஜி. எஸ்டேட் தொழிலாளி. இவரது மனைவி சுனிதா. இவர் தனது 1 வயது மகன் பினோத்துடன் ஆற்றில் துணி துவைக்க சென்றார்.
சுனிதா துணி துவைத்துக் கொண்டிருந்த போது, குழந்தை ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தது. சிறிதுநேரம் கழித்து குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுனிதா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து குழந்தையை தேடிய போது ஆற்றில் மிதப்பதை கண்டனர்.
உடனடியாக ஆற்றில் இறங்கி குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வால்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். #tamilnews