அரூர் அருகே வேட்டை கும்பல் சுட்டதில் மான் பலி
கம்பைநல்லூர்:
தர்மபுரி மாவட்டம், அரூர் வனக்கோட்டத்தில், அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், முயல், காட்டெருமை மற்றும் பறவைகள் அதிக அளவில் உள்ளன.
தண்ணீர் மற்றும் தீவனம் தேடி, வனப்பகுதியில் இருந்து வெளிவரும் மான்களை, நாய்கள் துரத்துகின்றன. இதில், தப்பியோடும் மான்கள், கிணற்றில் விழுந்தும், நாய்கள் கடிப்பதாலும் இறக்கின்றன. மேலும், கம்பி வலை மற்றும் கள்ள நாட்டுத் துப்பாக்கி மூலம் வேட்டையாடும் கும்பலால், மான் மற்றும் முயல்கள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, கொளகம்பட்டி வனப்பகுதியில் வேட்டைக்கு சென்ற மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு வயது பெண் புள்ளி மான் உடம்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த மான், எச்.தொட்டம்பட்டி - கொளகம்பட்டி சாலையில், தீரன் சின்னமலைபுரம் பஸ் ஸ்டாப் அருகே, இறந்து கிடந்தது. வனத்துறையினர், இறந்து கிடந்த மானை எடுத்துச் சென்று, அரூர் கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு செய்த பின், புதைத்தனர்.