மன்னார்குடி அருகே தீக்குளித்த ரேசன் கடை பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா (வயது 40). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ரேசன் கடையில் உள்ள இருப்பு பொருட்கள் விவரத்தை அதிகாரிகள் சரிபார்த்தனர். இதில் ரூ.84 ஆயிரம் தொகை குறைவாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்திராவை கடந்த வாரம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். இதனால் இந்திரா வேலையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கணவர் அம்மையப்பனிடம் சென்று ரேசன் கடையில் பணம் கட்ட வேண்டும். எனவே ரூ.84 ஆயிரம் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
இதில் கணவர் கோபத்துடன் பேசி விட்டு சென்றதால் இந்திரா விரக்தி அடைந்தார். இதனால் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் தீ மளமள என்று பரவி அவரது உடல் முழுவதும் பரவியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்திரா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.