செய்திகள்

புயல் மழையால் கன்னியாகுமரி, அனந்தபுரி 6 மணிநேரம் தாமதம்

Published On 2017-12-01 08:44 GMT   |   Update On 2017-12-01 08:45 GMT
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வரக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு வரக்கூடிய அனந்தபுரி ஆகியவை 6 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்து சேர்ந்தன.
சென்னை:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியதால் தென் மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பஸ், ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால் மின்கம்பங்கள், மரங்கள், வீடுகளின் கூரைகள் சரிந்து விழுந்தன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் தென் மாவட்டங்களில் இன்னும் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது. பலத்த மழை காரணமாக தென் மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரக்கூடிய ரெயில்கள் அனைத்தும் 30 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வரக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு வரக்கூடிய அனந்தபுரி ஆகியவை 6 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்து சேர்ந்தன.

காலை 8 மணிக்குள் எழும்பூருக்கு வரக்கூடிய இந்த 2 ரெயில்களும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வந்து சேர்ந்தது.

தென் மாவட்ட பகுதியை கடந்து வருவதற்கே பல மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதே போல எழும்பூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு ராமேஸ்வரம் புறப்படக்கூடிய சேது எக்ஸ்பிரசும் தாமதமாக புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News