செய்திகள்

என்ஜினீயரிங் மாணவரை குத்தி கொன்ற நண்பருக்கு 10 ஆண்டு ஜெயில்: கோவை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-11-23 11:09 GMT   |   Update On 2017-11-23 11:10 GMT
என்ஜினீயர் மாணவரை கொலை செய்த அவரது நண்பருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்ல சமுத்திரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் தினேஷ் (21). இவர் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

அதே கல்லூரியில் நீலகிரி மாவட்டம் எலநள்ளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ் (21)என்பவரும் படித்து வந்தார். இருவரும் கல்லூரி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தனர்.

ஒருவரையொருவர் மாறி மாறி அறையை சுத்தம் செய்ய வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஒருநாள் அறையை தினேஷ் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் கத்தியால் தினேஷ் வயிற்றில் குத்தினார். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அன்று இரவே தினேஷ் இறந்தார். இந்த சம்பவம் 27.7.15-ம் ஆண்டு நடைபெற்றது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மாணவரை கொன்ற சந்தோஷிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் கோபால கிருஷ்ணன் ஆஜரானார்.
Tags:    

Similar News