இந்தியா

அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ராகுல், பிரியங்காவை நிறுத்துவது பற்றி இன்று ஆலோசனை

Published On 2024-04-27 07:58 GMT   |   Update On 2024-04-27 07:58 GMT
  • ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
  • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.

ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.

இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News