நிதி மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
- அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு.
- சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளி நாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதுகுறித்து அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரூ.12,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.
நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியதில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான டினா அம்பானி ஆகியோ ரிடம் தனித்தனியாக வாக்கு மூலம் பெற அமலாக்கத்துறை முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து இரு வருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த 10 மற்றும் 17-ந்தேதி ஆகிய 2 முறையும் டினா அம்பானி ஆஜராகவில்லை. இதே போல அனில் அம்பானியும் இந்த வாரம் வாக்குமூலம் அளிக்க தவறினார்.
இந்த நிலையில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மனை அனுப்பியது. நிதி மோசடி தொடர்பான வழக்கில் வருகிற 26-ந்தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி ஒரு முறை அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
அதேநேரத்தில் டினா அம்பானி ஆஜராக புதிய தேதி அளிக்கப்பட்டள்ளதா? என்பது தெளிவாக தெரிய வில்லை. இந்த வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் புனித் கர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.