விருதுநகரில் கந்து வட்டி கொடுமை: 3 பேர் மீது வழக்கு
விருதுநகர்:
விருதுநகர் அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷேக் மைதீன் (வயது 54). இவர் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதில், ‘சில மாதங்களுக்கு முன்பு மேலரதவீதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கினேன். தற்போது அவர் கூடுதலாக வட்டி கேட்டு தொந்தரவு செய்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் பர்மா காலனியைச் சேர்ந்த பூ வியாபாரி மைதீன் (53) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் பெற்றார். தற்போது மாரிக்கனி கூடுதல் வட்டி கேட்பதாக கூறப்படுகிறது.
விருதுநகர் சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரிடம் ரூ. 25 ஆயிரம் கடன் வாங்கினார். தற்போது கூடுதல் வட்டி கேட்டு நாகராஜன் மிரட்டியதாக தெரிகிறது.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.