search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "usury torture"

    நாகர்கோவிலில் இன்று கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). தொழில் அதிபர். இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார்.

    இவரது வீடு 3 மாடி கொண்ட பங்களா வீடு ஆகும். இங்கு சுப்பிரமணி, அவரது தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோர் வசித்து வந்தனர்.

    வழக்கமாக சுப்பிரமணி காலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கி விடுவார். இன்று காலை நீண்டநேரமாகியும் கடையை திறக்க செல்லவில்லை. இதனால் கடையில் வேலைபார்க்கும் ஊழியர் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். கதவை பலமுறை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் சுப்பிரமணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டு படுக்கையறையில் சுப்பிரமணி, ருக்மணி, ஹேமா, ஷிவானி ஆகிய 4 பேரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாக கிடந்தனர். இரவில் அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 4 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    குடும்பத்துடன் தற்கொலை செய்த தொழில் அதிபர் சுப்பிரமணி தொழிலுக்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வேதனையில் சுப்பிரமணி, தானும் வி‌ஷம் குடித்து குடும்பத்தினருக்கும் கொடுத்து தற்கொலை செய்து இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சுப்பிரமணியின் மகள் ஷிவானி, ஹோமியோ டாக்டருக்கு படித்து வந்தார். 

    கூடலூரில் கந்து வட்டிகொடுமையில் ஈடுபட்டு கைதான போலீஸ்காரரின் மனைவி சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடியில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 5-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் ஏராளமான ரேசன் கார்டு, ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்று தெரியவந்தது.

    தினேசிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட அட்டைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர் மசினகுடி போலீசில் புகார் செய்து கார்டுகளை ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததும், பணம் வாங்குவோரிடம் இருந்து இந்த முக்கிய ஆதாரங்களை பெற்று பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    தினேஷ் கொடுத்த தகவலின்படி கூடலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ள மகாலிங்கம் என்பவரது மனைவி சாரதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கந்துவட்டிக்கு பணம் கொடுத்தது தெரியவந்தது.

    அதிக வட்டிக்கு பணம் கொடுத்தல், அடையாள அட்டை, ரேசன்கார்டுகளை வாங்கிக்கொண்டு மக்களை மிரட்டி ஏமாற்றுதல், உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனையடுத்து சாரதா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த தினேசையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
    கந்து வட்டி கொடுமை காரணமாக கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி பீனாமோள் (38).இவர்களுக்கு சகாய சப்னாமேரி (14), ஜெசிதா மேரி(9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மெக்கானிக்கான அந்தோணிராஜ் தற்போது கரூர் பெரிய வடுகப்பட்டியில் இரு சக்கரம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதற்காக அங்குள்ள வாடகை வீட்டில் மனைவி, மகள்களுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர், அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.45ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி கட்டி வந்தார். இதனிடையே கடன் கொடுத்த நபர், தனக்கு கூடுதலாக வட்டி தர வேண்டும் என்று அந்தோணிராஜிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தோணிராஜ் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை எடுத்து சென்றதோடு, அசலுடன் கூடுதல் வட்டி தர வேண்டும் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையடைந்த அந்தோணிராஜ் இன்று காலை தனது மனைவி பீனாமோள், மகள்கள் சகாயசப்னா மேரி, ஜெசிதா மேரி ஆகியோருடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கையில் மண்எண்ணை கேனை கொண்டு வந்திருந்தார். பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடைபெறுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இருப்பினும் போலீஸ் கண்ணில் படாமல் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அங்கு சென்றதும் திடீரென அந்தோணிராஜ் , தனது மனைவி, மகள்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக விரைந்து சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் தங்களிடம் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தும் விவகாரத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி ஒருவர் மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு கலெக்டர் அலுவலகங்களில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சிலர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மெக்கானிக் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×