செய்திகள்

புதுவையில் பலத்த மழையால் மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

Published On 2017-10-28 11:18 GMT   |   Update On 2017-10-28 11:18 GMT
புதுவையில் நேற்று இரவு பலத்த மழையையொட்டி பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

புதுச்சேரி:

வெப்ப சலனம் காரணமாக புதுவையில் மழை பெய்யும் என்று அவ்வப்போது வானிலை மையம் அறிவித்தாலும் புதுவையில் மழை பெய்ய வில்லை. ஒரு சில நாட்கள் தூறல் மழை மட்டுமே பெய்து வந்தது.

இந்த நிலையில் புதுவை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று பகல் 1 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து திடீரென்று பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.

பின்னர் மாலையிலும் அவ்வப்போது விட்டு, விட்டு லேசாக மழை பெய்தபடி இருந்தது. இரவு 8 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. மேலும் காற்றும் வீசியது.

இதனால் நகரில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இந்த மழையால் அண்ணா சாலை, நேரு வீதி, புஸ்சி வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் இருபுறமும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழையையொட்டி பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

Similar News