குன்னத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள ஆதியூர் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மகள் காயத்ரி (9). அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் காயத்ரிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த போது டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலன் இன்றி காயத்ரி இறந்தாள்.
குன்னத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் கணேசன். இவரது மகன்கள் யோகேஸ்வரன், நித்தரேஷ். இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
மாணவர்கள் இருவருக்கும் டெங்கு அறிகுறி இருந்ததால் குன்னத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக கணேசன் குற்றம் சாட்டினார்.