செய்திகள்

நடிகர் விஜய்யை வளைத்து போட பா.ஜனதா பிளாக் மெயில்: திருமாவளவன்

Published On 2017-10-21 09:46 GMT   |   Update On 2017-10-21 09:46 GMT
நடிகர் விஜய்யை வளைத்து போட பாரதிய ஜனதா பிளாக் மெயில் பண்ணுகிறது என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவொற்றியூர்:

எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கத்துக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் அடைகுப்பத்தில் மீனவர்களின் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

அவர்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதற்காக அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாலை விரிவாக்கத்திற்கு தேவையான இடம் போக மீதமுள்ள இடங்களில் மீனவர்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வில் தீவிரமாக தலையிடுகிறது. தமிழக அரசியலில் குழப்பத்தை உண்டாக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதை ஏற்கனவே விடுதலை சிறுத்தை சுட்டி காட்டி உள்ளது. இப்போது எல்லா கட்சிகளும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. ஆளும் கட்சியும் அதற்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாகவும், சுயமாகவும் இயங்க வேண்டும். மத்திய அரசு அதிகார வலிமையை பயன்படுத்தி மாநில அரசின் உரிமையில் தலையிடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது.


மெர்சல் திரைப்படத்தை எதிர்த்து பா.ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதில் கருத்து சுதந்திரம் என்பது கூட இல்லை. இதை அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கருதுகிறேன்.

அந்த படத்திற்கு நகல் விளம்பரம் தேட வேண்டும். கதாநாயகனை தங்கள் பக்கம் வளைத்து போட வேண்டும் என்று எண்ணி அவர்கள் இவ்வாறு செயல்படுவதாகதான் நான் கருதுகிறேன்.

ஒரு மிரட்டல் விடுப்பதன் மூலம் படம் வெற்றிகரமாக ஓடும் என்ற காரணத்தால் அந்த படத்தின் கதாநாயகன் தங்களுக்கு சாதகமாக வருவார் என்று எண்ணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார் என கருதி ‘பிளாக் மெயில்’ பண்ணுகிறார்கள்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் எழுச்சி நடை பயணம் வெற்றி பெறும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Tags:    

Similar News